தயங்காம எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம்... இந்தியாவில் Hero Electric செய்ய இருக்கும் தரமான சம்பவம்!
ஹூரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓர் தரமான நடவடிக்கையை இந்தியாவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்தியாவில் மின் வாகனங்களின் எண்ணிக்கை லேசாக உயர்ந்துக் காணப்படுகின்றது. மேலும், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேவேலையில், ஒரு சிலர் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டியவாறு இருக்கின்றனர்.

மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதனாலயே பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய நிலையைக் கலைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல் மற்றும் மின் வாகனங்களுக்கான சார்ஜ் நிரப்பட்ட பேட்டரிகளை வழங்கும் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான ஓர் நடவடிக்ககையிலேயே இந்தியாவின் மாபெரும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தலை நகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் மேஸிவ் மொபிலிட்டி (Massive Mobility) நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்த கூட்டணியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஓராண்டிற்குள் இப்பணியைத் தொடங்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த சார்ஜிங் மையம் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமின்றி அனைத்து நிறுவன தயாரிப்புகளும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட இருக்கின்றது.

ஆகையால், இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் என அனைத்து ரக மின் வாகனங்களும் இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை 1,650 சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது. 2022ம் ஆண்டின் இறுதிக்குள் இதனை 20 ஆயிரம் எண்ணிக்கையில் உயர்த்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.

கூட்டணிகுறித்து ஹூரோ எலெக்ட்ரிக் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ சோஹிந்தர் கில் கூறியதாவது, "கடந்த சில மாதங்களாக அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இது மின் வாகன தொழிலை உந்தும் வகையில் இருக்கின்றது. எனவே நாங்கள் எங்கள் வரம்பை விரிவுப்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1,650 மின் வாகன சார்ஜிங் மையங்களை 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 20 ஆயிரமாக அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" என்று தெரிவித்தார்.

மேஸிவ் மொபிலிட்டி நிறுவனம் ஸ்மார்ட் இணைப்பு நெட்வொர்க்கை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. மூன்று மற்றும் இரண்டு சக்கர மின் வாகனங்களுக்கு பயன்படும் வகையில் சார்ஜிங் மையங்களை நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன் கிளவுட் அடிப்படையிலான பார்க்கிங் மற்றும் சார்ஜிங் பாயிண்ட் நிலையம் பற்றிய தகவல்களையும் நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தே இந்தியாவில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருக்கின்றன.

மின் வாகனங்களுக்ககான சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்காக டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியதைப் போல வீல்ஸ் இஎம்ஐ (Wheels EMI) நிறுவனத்துடனும் அண்மையில் ஹீரோ எலெக்ட்ரிக் கூட்டணியைத் தொடங்கியது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எளிய கடன் திட்டத்தை வழங்கும் நோக்கில் இந்நிறுவனத்துடன் ஹீரோ எலெக்ட்ரிக் கூட்டணியைத் தொடங்கியது.


Click it and Unblock the Notifications








