ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது? வெளிவந்த சூப்பரான தகவல்!!
ஹீரோ மோட்டோகார்பின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சாலையில் செல்லும்போது தெளிவாக தெரிகிறது. இதனாலேயே புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றி வருகின்றன. அதேநேரம் பெட்ரோல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துவரும் முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க துவங்கியுள்ளன.

தற்போதைக்கு டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் என இந்த வகையில் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் இன்னும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வாளர் அழைப்பின் போது தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை பொருளாதார அதிகாரி நிரஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார். ஹீரோ மோட்டோகார்ப்பின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய செய்தி வெளியாவது இது முதல்முறையல்ல.

சில மாதங்களுக்கு முன்னர், தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் வீடியோ ஒன்றில் ஹீரோ மோட்டோகார் நிறுவனத்தின் சிஇஓ டாக்டர். பவண் முஞ்சல் பேசி இருந்தார். நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் காட்சி தந்த ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் இருந்தது.

மற்றப்படி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் எதையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை புதிய பிராண்டில் அறிமுகப்படுத்தலாம். இவ்வாறு புதிய ஒரு பிராண்ட் பிறக்கவுள்ளதா? அதன் பெயர் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில்கள் முதல் ஹீரோ இ-ஸ்கூட்டரின் அறிமுகத்தின் போது கிடைத்துவிடும்.

ஹீரோ எலக்ட்ரிக் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பிராண்ட் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவருகிறது. அதன் லோகோ வேறு. ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்கள் ஒரே முஞ்சல் குடும்பத்தில் உள்ள வெவ்வேறான இருவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதனால் தான் வேறு பெயரிலான பிராண்டின் கீழ் தனது எலக்ட்ரிக் 2-வீலர்ஸை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம்.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்காகவும், பேட்டரி நீக்க கட்டமைப்பை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்காகவும் ஹீரோ மோட்டோகார்ப், தைவான் நாட்டை சேர்ந்த கோகோரோ என்ற நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இதனால் 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீக்கக்கூடிய பேட்டரியை எதிர்பார்க்கலாம். மார்ச் மாதத்தில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படுவதை தொடர்ந்து இரண்டாவது வாகனம் 2022ன் இரண்டாம் அரைப்பாதியில் வெளியிடப்படலாம்.

ஹீரோ மோட்டோகார்பின் மிக பெரிய விநியோக தளம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்ய உதவியாக இருக்கும் என்றும், நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் ஹீரோவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் நிரஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

குறைக்கடத்திகளுக்கான பெரிய தேவை உலகளவில் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இருப்பினும் இதனால் தங்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிஇஓ பவன் முஞ்சல், வருகிற பண்டிகை காலத்திற்கான தங்களது கண்டுப்பிடிப்புகள் வரிசைக்கட்டி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 20ஆம் முதல் அமலுக்கு வந்த இந்த விலை அதிகரிப்பின்படி ஹீரோ 2-வீலர்ஸின் விலைகள் ரூ.3,000 வரையில் மாடல்களை பொறுத்து உயர்த்தப்பட்டுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 4,31,137 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 24.19% குறைவாகும். ஆனால் முந்தைய 2021 ஜூலை மாதத்தை காட்டிலும் 0.45% அதிகமாகும்.


Click it and Unblock the Notifications








