கொரோனா பரவல் தீவிரம்... பணியாளர்கள் நலன்தான் முக்கியம்... ஹீரோ மோட்டோார்ப் எடுத்த அதிரடி முடிவு!
நாடுமுழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பணியாளர்களின் நலன் கருதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனது அனைத்து இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் சர்வதேச உதிரிபாக மையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கொரோனா பரவல் தீவிரமாகி இருப்பதால், இந்த அதிரடி முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பால், ஹீரோ மோட்டோகார்ப் ஆலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கி இருக்கிறது. அதேநேரம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆலைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை செய்ய இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலைகளை மூடியதால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்புகிறது. இந்த உற்பத்தி இழப்பை ஆலை திறந்தவுடன் இந்த காலாண்டு காலத்திலேயே சரிகட்டிவிடுவதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது.

இதன்மூலமாக, தேவையை எளிதாக பூர்த்தி செய்துவிடலாம் என்று அந்நிறுவனம் கருதுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆலைகளில் உற்பத்தி முடங்கி இருப்பதால், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவிரி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், தனது சர்வதேச உதிரிபாக மையத்தை 4 நாட்கள் மூடுவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது. இதர கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றுவோர் சுழற்சி முறையில் அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார், ஹரியானாவில் தாருஹெரா, குர்கான், குஜராத்தில் வதோதரா மற்றும் ராஜஸ்தானில் நீம்ரானா ஆகிய இடங்களில் இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் மொத்தமாக ஆண்டுக்கு 9.8 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

கொரோனா பரவல் காரணமாக, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆலைகளை தற்காலிகமாக மூடும் முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்துள்ளது. பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








