சரவெடி கொளுத்தப் போகும் ஹீரோ நிறுவனம்... 50 புதிய இருசக்கர வாகனங்களை களமிறக்க மெகா திட்டம்!
இருசக்கர வாகன உற்பத்தியில் 100 மில்லியன் யூனிட்டுகளை தொட்டு இமாலய சாதனை படைத்துள்ள கையோடு, 50 புதிய இருசக்கர வாகனங்களை களமிறக்கும் மெகா திட்டத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன உற்பத்தியில் 100 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை தொட்டு நேற்று சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, நம்பர்-1 இடத்தை தக்க வைப்பதற்கு பல மெகா திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.

அதன்படி, ஆண்டுக்கு 10 புதிய மாடல்கள் வீதம், வரும் 2025ம் ஆண்டுக்குள் 50 புதிய இருசக்கர வாகனங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதில், புத்தம் புதிய இருசக்கர வாகன மாடல்கள், புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் இடம்பெறும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில்,"எமது வெற்றிப் பயணத்தை தொடரும் வகையில், வளர்ச்சியை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த உள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் பல புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்க உள்ளோம். இதுதவிர்த்து, வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மாடல்களுக்காக எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு அதிக முதலீடு செய்ய இருக்கிறோம். இதன்மூலமாக, பல புதுமையான மற்றும் புதிய போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக உலகின் அதிக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பெருமையை தொடர்ந்து தக்க வைக்கும் விதமாக, பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கு அதிக முனைப்பு காட்டி வருகிறது.

இருசக்கர வாகன உற்பத்தியில் 100 மில்லியன் யூனிட் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ள ஹீரோ மோட்டோகார்ப், இந்த மகத்தான தருணத்தை கொண்டாடும் வகையில் 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








