சார்ஜ் தீர்ந்த பேட்டரியை கொடுத்து, முழு-சார்ஜ் பேட்டரியை பெற்று கொள்ளலாம்!! ஹோண்டாவின் பேட்டரி பகிர்வு சேவை
இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகனங்களுக்கான பேட்டரி பகிர்வு சேவையை துவங்க திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஹோண்டா மொபைல் பவர் பேக் இ என்ற எளிமையாக எடுத்து செல்லக்கூடிய மற்றும் நீக்கக்கூடிய புதிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான செயல் விளக்க சோதனைகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே இந்தியாவில் மேற்கொள்ள ஹோண்டா ஆரம்பித்துவிட்டது.

இந்த சோதனையில் மொத்தம் 30 எலக்ட்ரிக் ரிக்ஷா டாக்ஸிகள் ஏறக்குறைய சுமார் 2 லட்ச கிமீ தொலைவிற்கு இயக்கி பார்க்கப்பட்டன. பேட்டரி பகிர்வு சேவை வணிகத்தை புரிவதற்காக இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை ஹோண்டா நிறுவவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிறுவனம் நகரங்களில் ஆங்காங்கே பேட்டரி மாற்று நிலையங்களை அமைத்து, பேட்டரி பகிர்வு சேவையினை தடையில்லாமல் மேற்கொள்ளுமாம்.

எப்படியிருந்தாலும் இந்த சேவை முதலாவதாக நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே கொண்டுவரப்படும். அதன்பின் இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பகிர்வு சேவைக்காக சில எலக்ட்ரிக் ரிக்ஷா தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து இந்த ஜப்பானிய நிறுவனம் பணியாற்றவுள்ளது.

ஹோண்டாவின் இந்த பேட்டரி பகிர்வு சேவையானது மிக எளியது மற்றும் சிக்கல் இல்லாதது. விளக்கமாக கூற வேண்டுமென்றால், நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் சமையலுக்கு சிலிண்டர் பயன்படுத்துகிறோம். ஒரு சிலிண்டர் காலியாகினால் குறிப்பிட்ட தொகையுடன் காலி சிலிண்டரை கொடுத்து முழு சிலிண்டரை பெற்று கொள்கிறோம். இதே ஃபார்முலா தான் ஹோண்டாவின் இந்த MPP (மொபைல் பவர் பேக்) e பேட்டரிகள் பகிர்வு சேவையிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் முன்பதிவு செய்தால் முழு சிலிண்டர் வீட்டை தேடிவரும். ஆனால் ஹோண்டாவின் MPP e பேட்டரி பகிர்வு சேவையில் எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகன உரிமையாளர்கள் தாமாக அருகில் உள்ள பேட்டரி மாற்று நிலையங்களுக்கு சென்று காலியான தங்களது MPP e பேட்டரியை கொடுத்து முழு-சார்ஜ் ஏற்றப்பட்ட MPP e பேட்டரியை பெற்று கொள்ளலாமாம்.

இதற்கு எவ்வளவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது? முதலாவதாக MPP e பேட்டரியை வாங்கும்போது முதல் தொகை ஏதேனும் செலுத்த வேண்டுமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தற்போதைக்கு பதில் இல்லை. இவற்றிற்கான பதில்களை அடுத்த ஆண்டில் இந்த சேவை அறிமுகத்தின்போது ஹோண்டா நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தற்சமயம் 8 மில்லியனுக்கும் அதிகமான ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தினந்தோறும் முக்கியமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 80 லட்ச ஆட்டோ ரிக்ஷாகளில் நகர்புறங்களில் பயன்படுத்தப்படுபவைகளில் அதிகமானவை சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கப்படுவபவைகளாக உள்ளன. மின்மயமாக்கப்பட்ட இயக்க தயாரிப்புகள் தற்சமயம் மூன்று விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. ஒன்று குறைவான ரேஞ்ச்சையே நிர்ணயிக்க இயலுவது, மற்றொன்று நீண்ட சார்ஜிங் நேரம் மற்றும் மூன்றாவது பேட்டரிகளின் அதிக விலை.

2022இல் இருந்து இந்தியாவில் மூன்று-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பகிர்வு சேவையை துவங்கவிருப்பது குறித்து ஹோண்டா மோட்டார் கோ., லிமிடெட் நிறுவனத்தின் வாழ்க்கை உருவாக்க செயல்பாடுகள் பிரிவு முதன்மை அதிகாரி மினோரு கட்டோ கருத்து தெரிவிக்கையில், ஹோண்டா மொபைல் பவர் பேக் (MPP) சிறிய அளவிலான எலக்ட்ரிக் வாகனங்கள் உள்பட அனைத்து வகையான சாதனங்களையும் மின்மயமாக்கும் பெரும் ஆற்றலை கொண்டுள்ளது.

அதேநேரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டையும் அதிகப்படுத்தும். இந்தியாவில் பேட்டரி பகிர்வு சேவையை வழங்குவதன் மூலம், ரிக்ஷாக்களின் விரைவான மின்மயமாக்கலுக்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கத்திற்கும் ஹோண்டா பங்களிக்கவுள்ளது. MPP-இன் பயன்பாட்டை மேலும் விரிவுப்படுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை திறனை விரிவுப்படுத்தும் மகிழ்ச்சியுடன் ஹோண்டா தொடர்ந்து சேவை செய்யும் என்றார்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. முதல் எலக்ட்ரிக் ஹோண்டா 2-வீலர் அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பற்றிய விபரங்கள் எதையும் இன்னும் இறுதி செய்யவில்லை என HMSI சிஇஒ அட்சுஷி ஒகாடா தெரிவித்திருந்தார். ஹோண்டா பிராண்டில் இருந்து சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இதற்கான சாத்தியக்கூறுகளை தீபாவளிக்கு பிறகே டீலர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக ஹோண்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








