ஒரே மாதத்தில் 4.32 லட்சம் டூ-வீலர்களை விற்பனை செய்த பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஆச்சரியப்டுவீங்க!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் மட்டும் 4.32 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக ஆச்சர்யமூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த நிறுவனம், எந்த மாடல் அதிகம் விற்பனையான இருசக்கர வாகன மாடல் என்பது உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்ம. இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஹோண்டா (HMSI). இந்நிறுவனமே இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 4,32,207 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. உள்நாட்டு சந்தையில் 3,94,623 யூனிட் இருசக்கர வாகனங்களையும், வெளிநாடுகளுக்கு 37,584 யூனிட் இருசக்கர வாகனங்களையும் நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

ஒரே ஒரு மாதத்தில் இத்தகைய அதிகபட்ச எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் விற்பனைச் செய்திருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் உள்நாட்டு விற்பனையில் நிறுவனம் 20 சதவீதம் வரை விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது.

உள்நாட்டு விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் பல மடங்கு ஏற்றத்தை நிறுவனம் பெற்றிருக்கின்றது. 2020 அக்டோபர் மாதத்தில் 32,721 யூனிட் இருசக்கர வாகனங்களை மட்டுமே நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால், நடப்பாண்டிலோ நிறுவனம் 37,584 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இது 15 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

2020 அக்டோபரில் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 5,27,180 விற்பனைச் செய்திருந்தது. இது மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியாகும். ஆகையால், கடந்த ஆண்டு இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால், 2021 அக்டோபர் சற்றே சோகமான சூழல் உருவாகியுள்ளது.

நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இருக்கின்றது. மிக சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் 5 கோடி இருசக்கர வாகன விற்பனை என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையைச் செய்திருந்தது. ஆக்டிவா மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய இருசக்கர வாகன மாடல்களினாலேயே இந்த தரமான சம்பவத்தை நிறுவனம் நிகழ்த்தியது.

ஆம், 5 கோடி இருசக்கர வாகன விற்பனையில் மிக அதிகம் விற்பனையான இருசக்கர வாகன மாடல்களாக ஆக்டிவாவும், சிபி ஷைன் மோட்டார்சைக்கிளுமே இருக்கின்றன. மேலும், இத்தகைய வரவேற்பை தொடச்சியாக பெற வேண்டும் என்பதற்காக நிறுவனம் புதுமுக இருசக்கர வாகன மாடல்களைக் களமிறக்க தொடங்கியிருக்கின்றது.

அண்மையில், ஹோண்டா சிபி 200எக்ஸ் மாடலை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னதாக சிபிஆர்650ஆர், சிபி650ஆர் மற்றும் கோல்டு விங் எனப்படும் மிக விலையுயர்ந்த டூரிங் ரக இருசக்கர வாகனத்தை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் புதிய சேவையை நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. தற்போது, முன்னோட்டமாக எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் சேவையையே நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

ஹோண்டாவின் இந்த புதிய சேவை 2022ம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எளிதில் எடுத்து செல்லக்கூடிய மற்றும் நீக்கக்கூடிய பேட்டரிகளை இந்த சேவையில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான செயல் விளக்க சோதனைகளை நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்தே மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

இந்த சோதனையின்கீழ் ஒட்டுமொத்தமாக 30 எலக்ட்ரிக் ரிக்ஷாக்கள் ஏறக்குறைய சுமார் 2 லட்சம் கிமீட்டர்கள் தூரம் இயக்கி பார்க்கப்பட்டிருக்கின்றன. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதேபோன்று, இன்னும் பல நிறுவனங்கள் இம்மாதிரியான பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








