அப்பாடா... ஒருவழியாக ஆக்டிவா ஸ்கூட்டரில் புளூடூத் வசதி அறிமுகமாகிறது?
ஹோண்டா நிறுவனம் தனது ரோட்சிங்க் என்ற இருசக்கர வாகனங்களுக்கான புளூடூத் இணைப்பு தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.

கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை தொடர்ந்து இப்போது பைக், ஸ்கூட்டர்களின் பரவலாக புளூடூத் இணைப்பு வசதி வழங்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது. சந்தைப் போட்டியை கருத்தில்கொண்டு இந்த வசதிகளை வழங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

பைக் அல்லது ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இருக்கும் தகவல்களை புளூடூத் மூலமாக உரிமையாளர் தனது ஸ்மார்ட்ஃபோனில் பார்ப்பதற்கான வாய்ப்பை பெற முடிவதுடன், நேவிகேஷன் வசதிக்கும் இது வழிவகுக்கிறது.

இதனால், புளூடூத் வசதியை இருசக்கர வாகனங்களில் வழங்குவதிலும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது பிரத்யேக புளூடூத் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுவதற்கு இந்தியாவில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.

ஹோண்டா ரோடுசிங்க் என்ற பெயரில் இந்த புளூடூத் தொழில்நுட்பம் குறிப்பிடப்படுகிது. தற்போது இந்த புளூடூத் தொழில்நுட்பம் ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் வகை பைக் மாடல்களான ஹோண்டா ஹைனெஸ் சிபி350, சிபி1000ஆர் ஆகிய பைக்குகளில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தனது ரோடுசிங்க் தொழில்நுட்பத்தை சாதாரண வகை இருசக்கர வாகனங்களான ஆக்டிவா, க்ரேஸியா, எக்ஸ் பிளேடு மற்றும் ஹார்னெட் 2.0 ஆகிய இருசக்கர வாகனங்களில் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இந்த தொழில்நுட்பம் ஹோண்டாவின் சாதாரண வகை இருசக்கர வாகனங்களிலும் எதிர்பார்க்கலாம்.

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போதே ஃபோன் அழைப்புகளை பேசுவதற்கும், குறுந்தகவல்களை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மூலமாக படிப்பதற்கும், நேவிகேஷன் வசதியை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் இந்த ரோடுசிங்க் தொழில்நுட்பத்தை ஹோண்டா வழங்குகிறது. ஆனால், இந்தியாவில் வாய்ஸ் கமாண்ட் வசதி இருக்காது.

புளூடூத் இணைப்பு வசதியை வாடிக்கையாளர்கள் ஆப்ஷனலாக பெறும் வாய்ப்பை ஹோண்டா வழங்கும் என தெரிகிறது. அதாவது, ரூ.5,000 கூடுதல் விலை இந்த புளூடூத் இணைப்பு வசதி கொண்ட மாடல்களுக்கு நிர்ணயிக்கப்படலாம். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








