ஒருத்தர் மட்டுமே போக முடியும்! புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகளவில் வெளியீடு செய்த ஹோண்டா! அட்டகாசமா இருக்கே
ஒருத்தர் மட்டுமே போகக் கூடிய யு-பீ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது மற்றுமொரு நிறுவனமான உயாங் வாயிலாக ஹோண்டா உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இது இந்தியாவிற்கு விற்பனைக்கு வருமா? என்னென்ன சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கு போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மிக சமீபத்தில் யு-கோ (U-GO) புதுமுக எளெக்ட்ரிக் ஸ்கூட்டரை சீன நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. உயாங் (Wuyang) சீன நிறுவனத்தின்கீழே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகம் செய்தது. இது ஹோண்டாவிற்கு சொந்தமான மற்றொரு வாகன உற்பத்தி நிறுவனமாகும். ஆனால், இது ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது, இந்த நிறுவனத்தின்கீழே இன்னொரு மின்சார தயாரிப்பை ஹோண்டா வெளியீடு செய்துள்ளது. யு-பீ (U-BE) எனும் பெயரில் இந்த புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீடானது உலகளவில் செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

யு-பீ ஓர் ஒரு நபர் அமர்ந்து செல்லக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இது நகர பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஒற்றை பயணிக்கான இருக்கை வசதியுடன் இதனை ஹோண்டாவின் உயாங் வடிவமைத்திருக்கின்றது. இதனை ஒற்றை இருக்கை அமைப்பில் உருவாக்க மற்றுமொரு காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

எடைக் குறைப்பு செய்வதன் வாயிலாக முழு திறன் வெளிப்பாடு மற்றும் அதிக ரேஞ்ஜ் வெளிப்பாடு ஆகியவற்றை நம்மால் பெற முடியும். இதனடிப்படையிலேயே ஒற்றை இருக்கை வசதி யு-பீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பல சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதற்கான தனி அமைப்பு இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்படவில்லை. அதேசமயம், முன் பகுதியில் கால் வைக்கும் இடத்தில் பெரிய இட வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் லக்கேஜ்களை வைத்துக் கொள்ள முடியும். மேலும், இங்கு எளிதாக பொருட்கள ஏற்றி, இறக்கிக் கொள்ள முடியும்.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதிகளாக திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், செல்போனை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக யுஎஸ்பி போர்ட், செல்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை யு-பீ மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சிறப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஒன்றும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

அது ஸ்கூட்டரின் ரேஞ்ஜ், ஸ்பீடு, ஓடோமீட்டர், வோல்டேஜ் மற்றும் பேட்டரியின் நிலைப்பாடு ஆகியவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள உதவும். உயாங் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பன்முக நிற தேர்வில் வழங்க இருக்கின்றது. வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களிலேயே யு-பீ கிடைக்கும்.

நிறத்தால் மட்டுமல்லைங்க இதன் தோற்றமும் சற்று கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. இன்டிகேட்டர்களுடன் கூடிய மிகவும் ஸ்டைலான ஹெட்லேம்ப், ஷார்ப்பான வால் பகுதி மின் விளக்கு, இரு நிற சேட்டில் உள்ளிட்டவை யு-பீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

உயாங் நிறுவனம் யு-பீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மூன்று விதமான பேட்டரி பேக்குகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அவை, 48V-15Ah, 48V-20Ah மற்றும் 48V-24Ah ஆகும். இது ஒவ்வொன்றும் தனித்துவமான ரேஞ்ஜ் திறனை வெளிப்படுத்தக் கூடியவை. அதாவது, 48V-15Ah பேட்டரி பேக்கில் கிடைக்கும் யு-பீ அதிகபட்சமாக 55 கிமீ ரேஞ்ஜையும், 48V-20Ah பேட்டரி பைக்கில் கிடைக்கும் யு-பீ 70 கிமீ ரேஞ்ஜையும் மற்றும் 48V-24Ah பேட்டரி பேக்கில் கிடைக்கும் யு-பீ அதிகபட்சமாக 85 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

தொடர்ந்து, ஸ்கூட்டரில் அதிக திறன் வெளிப்பாட்டைக் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்படுத்தியுள்ளது உயாங். இது சத்தத்தை குறைவாக வெளிப்படுத்தும். மேலும், மின் நுகர்வையும் குறைவாக செய்யும். தொடர்ந்து, 12 டிகிரி சரிவுகளை் கூட மிக சுலபமாக சமாளிக்கும் திறனைக் கொண்டதாக இவ்வாகனம் இருக்கின்றது. ஆனால், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இதுமட்டுமே இவ்வாகனத்தில் வேதனையளிக்கக் கூடிய ஓர் அம்சமாக இருக்கின்றது.

இது என்ன மாதிரியான சிறப்பு வசதியைக் கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியோ, துக்கமோ நாம் பட தேவையில்லை. ஏனெனில் இதன் இந்திய வருகை என்பது சாத்தியமற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஹோண்டா நிறுவனம் தனது இருசக்கர வாகனத்தை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைச் சமாளிக்க மிக விரைவில் அது அதன் எலெக்ட்ரிக் வாகனத்தைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








