வட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா? மீண்டும் தொழிற்சாலையை திறக்கும் ஹோண்டா டூ வீலர்ஸ்!
ஹோண்டா டூ-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலை பணிகளை மீண்டும் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தொழிற்சாலை பணிகளை மே 1ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தி கொள்ளவுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மே 15 வரையில் என்பதை மே 28 வரையில் என ஹோண்டா நீட்டித்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் கணிசமாக குறைய துவங்கி இருப்பதால் மீண்டும் தொழிற்சாலையை திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் முழு நேரமும் தொழிற்சாலை செயல்படாது எனவும், கட்ட வாரியாக செயல்படும் எனவும் ஹோண்டா டூ வீலர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா டூ வீலர்ஸ் பிராண்டிற்கு இந்தியாவில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு பணியாற்றும் அலுவல அதிகாரிகள் தொடர்ந்து வொர்க் ஃப்ரம் ஹோமில் தான் இருக்கவுள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மட்டுமே தேவைக்கு ஏற்றாற்போல் அழைக்கப்படவுள்ளனர். இருப்பினும் இந்த சோதனை நேரத்தில் வாடிக்கையாளர்கள் & வணிக கூட்டணி நிறுவனங்களுக்கு சிறந்த சேவையினை வழங்க ஹோண்டா உறுதியாக உள்ளது.

இந்த அறிவிப்புகளுடன் அங்கீகாரம் பெற்ற டீலர்களுக்கான நிவாரண அறிவிப்பு ஒன்றையும் ஹோண்டா டூ வீலர்ஸ் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், இருப்பில் உள்ள வாகனங்களுக்கான முழு வட்டி தொகையை 30 நாட்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு டீலர்கள் செலுத்த வேண்டியதில்லை என்பதாகும்.

முன்னதாக இந்த ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், உத்தரவாத மற்றும் இலவச வாகன சேவைக்கான இறுதி நாளை ஜூலை 31 வரையில் அதிகரித்து ஹோண்டா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மே 31ஆம் தேதிக்குள் யாருடைய இலவச சேவை, உத்தரவாத காலம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத காலம் முடிவடைய இருந்ததோ அவர்களுக்கு ஜூலை 31 வரையில் ஹோண்டா நேரத்தை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் நிறுவனத்தின் சிஇஒ-வும், நிர்வாக இயக்குனருமான அட்சுஷி ஒகடா கருத்து தெரிவிக்கையில், அந்தந்த மாநில அரசாங்கங்களின் அனைத்து கோவிட்-19 தடுப்பு மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை பின்பற்றி படிப்படியாக உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகின்றோம்.

நாட்டில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புவதற்கன அறிகுறிகள் தென்பட்டாலும், தொடர்ந்து நிலைமையை மிக உன்னிப்பாக கண்காணிப்போம் என்றார். இந்த கடினமான காலத்தில், ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது விநியோகஸ்தர்களுக்கு நிதி உதவியை விரைவாக அளித்து வருகிறது என இந்த நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








