எலெக்ட்ரிக் பைக்குகள் பற்றிய தவறான எண்ணங்களை சுக்குநூறாக நொறுக்க போகிறது! இந்தியாவை கலக்க வரும் ஹோப் ஓஎக்ஸ்ஓ!
ஹோப் ஓஎக்ஸ்ஓ எலெக்ட்ரிக் பைக் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹோப் எலெக்ட்ரிக் (HOP Electric). வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான ஹோப் எலெக்ட்ரிக், அதிக செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் பைக் ஒன்றை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஓஎக்ஸ்ஓ (Hop OXO) என பெயரிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஹோப் ஓஎக்ஸ்ஓ எலெக்ட்ரிக் பைக்கை சோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமான பெட்ரோல் பைக்குகளை போல் எலெக்ட்ரிக் பைக்குகள் வேகமாக இயங்காது, எலெக்ட்ரிக் பைக்குகளை விட பெட்ரோல் பைக்குகள்தான் அதிக சக்தி வாய்ந்தவை, எலெக்ட்ரிக் பைக்குகளின் டிசைன் நன்றாக இருக்காது என பலர் நினைக்கின்றனர்.
ஆனால் இவை அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி உலா வரும் தவறான கருத்துக்கள் ஆகும். அத்துடன் எலெக்ட்ரிக் பைக்குகளின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், பேலன்ஸை பராமரிக்க முடிவதில்லை எனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அனைத்து கருத்துக்களுமே முற்றிலும் உண்மைக்கு மாறானது ஆகும்.
எலெக்ட்ரிக் பைக்குகளை பற்றிய இந்த கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில், ஹோப் ஓஎக்ஸ்ஓ எலெக்ட்ரிக் பைக்கின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த எலெக்ட்ரிக் பைக் சர்வ சாதாரணமாக மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. அதுவும் இந்த வேகத்தை வெறும் அரை நிமிடத்திற்கு உள்ளாகவே இந்த எலெக்ட்ரிக் பைக்கால் எட்ட முடிந்தது.
ஆனால் சோதனை ஓட்டத்தின்போது இந்த எலெக்ட்ரிக் பைக் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தது. இதன் டிசைன் வெளிப்படுத்தப்படும்போது நம்மை நிச்சயமாக கவரும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் எந்தவிதமான சத்தத்தையும் எழுப்பாது என்பதுடன், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது என்பது கூடுதல் சிறப்பு.
இந்த பைக்கின் ஆக்ஸலரேஷன் வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என ஹோப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வேகமான மற்றும் அமைதியான ஹை-டெக் எலெக்ட்ரிக் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எரிபொருளை எரிக்காமல் இவ்வளவு சக்தி வாய்ந்த ஆக்ஸலரேஷன் சாத்தியம் என்றால், எலெக்ட்ரிக் பைக்குகளை நாம் தேர்வு செய்யலாம்.
இதன் மூலம் எதிர்காலத்தில் நமது சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பொதுவாக ஒரு பைக் ஆர்வலர் என்னென்ன அம்சங்களை எதிர்பார்ப்பார்கள்? டிசைன் நன்றாக இருக்க வேண்டும், சௌகரியமான பயணம் கிடைக்க வேண்டும், சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும், எரிபொருள் செலவை சமாளிக்கும் வகையில் நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும், போதுமான வேகம் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தேவை.
இவை அனைத்தும் ஒரு எலெக்ட்ரிக் பைக்கில் சாத்தியம் என்றால், நாம் ஏன் விலை உயர்ந்த பெட்ரோல் போன்ற எரிபொருட்களை சார்ந்து இருக்க வேண்டும்? இன்றைய தலைமுறை இளம் பைக் ரைடர்கள் விரும்பும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் நிரம்பிய தயாரிப்பாக ஓஎக்ஸ்ஓ இருக்கும் என ஹோப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீங்கள் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர் என்றால், ஹோப் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகள் உங்களை கவர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உலகம் தற்போது வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. இந்த நேரத்தில் அனைவருமே, குறிப்பாக இளைய தலைமுறையினர் செலவு குறைந்த மற்றும் வேகமான போக்குவரத்து முறைகளை விரும்புகின்றனர். இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சரியான தீர்வு.
ஹோப் எலெக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி...
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, சிக்கனமான, திறன்மிக்க எலெக்ட்ரிக் டூவீலர்களை வழங்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் ஹோப் எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஹோப் நிறுவனம் மூன்று தயாரிப்புகளை தயாராக வைத்துள்ளது.
இதில், இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், ஒரு எலெக்ட்ரிக் பைக்கும் அடங்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோப் எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் காலத்தில் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்களின் தேவையை ஹோப் எலெக்ட்ரிக் நிறுவனம் பூர்த்தி செய்யும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








