புதிய பைக்கிற்கான பெயரை இந்தியாவில் பதிவு செய்தது ஹோண்டா... என்ன மாதிரியான ஸ்டைலில் புதிய பைக் வர இருக்கு?
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஓர் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த பைக்கிற்கான பெயரையே நிறுவனம் தற்போது இந்தியாவில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மிக விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புத்தம் புதிய டூ வீலர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புதிய பைக் தற்போது விற்பனையில் இருக்கும் ஹார்னெட் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா வெளியிடவில்லை. அதேசமயம், நிறுவனம் இந்தியாவில் புதிய பெயர் கொண்ட இருசக்கர வாகனத்தை களமிறக்குவதற்காக வர்த்தக சான்றினை பெற்றிருக்கின்றது. இதன்படி, புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் என்எக்ஸ்200 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாக தெரிய வந்திருக்கின்றது.

முந்தைய காலங்களில் ஹோண்டா நிறுவனம் தினசரி வாகன பயன்பாட்டாளர்களை மையமாகக் கொண்ட பட்ஜெட் ரக பைக்குகளையே அதிகம் அறிமுகப்படுத்தி வந்தது. இதனை சற்று மாற்றிக் கொண்டு சமீப காலமாக அதிக செயல் திறன்மிக்க இருசக்கர வாகனங்களை நிறுவனம் களமிறக்கி வருகின்றது.

அந்தவகையில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பைக் 200 சிசி பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. என்எக்ஸ்200 எனும் பெயர் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பைக் அட்வென்சர் ரகமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகின்றது. தற்போது இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கும் தகவல்களும் இதனையே உறுதிப்படுத்துகின்றன.

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் 200சிசி வாகன பிரிவில் பங்குக் கொள்ளும் விதமாக ஹார்னெட் 2.0 பைக்கை நாட்டில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிலையிலேயே இப்பிரிவில் கூடுதல் தேர்வை சேர்த்து தனது வாகன விற்பனையைப் வலுப்படுத்தும் வகையில் புதிய என்எக்ஸ்200 பைக்கையும் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது சீனாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிபி190எக்ஸ் மற்றும் சிஎக்ஸ்-02 ஆகிய இரு கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் என்எக்ஸ் 200 பைக் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுமுக அட்வென்சர் பைக்கில் க்னக்கிள் குவார்ட், உயரமான விண்ட் ஸ்கிரீன், லக்கேஜ் கேரியர் ஆகியவற்றுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

நீண்ட தூர டிராவலை குறிக்கோளாக வைத்து இப்பைக் விற்பனைக்கு வர இருப்பதால் அதிக சௌகரியமான உணர்வை வழங்கும் சஸ்பென்ஷன்கள், சற்று உயரமான ஹேண்டில் பார், சிறந்த பொசிஷனை வழங்கக் கூடிய ஃபூட் பெக் மற்றும் அதிக மிருதுவமான இருக்கை அமைப்பு ஆகியவை என்எக்ஸ்200 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஹார்னெட் பைக்கின் சகோதரனைப் போலும் இப்பைக் உருவாகி வருவதால் புதிய என்எக்ஸ் 200 பைக்கில் 184.4 சிசி திறன் கொண்ட ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இடம்பெற இருக்கின்றது. இந்த எஞ்ஜின் ஹார்னெட் 2.0 பைக்கில் 17.27 பிஎஸ் பவரையும், 16.01 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

vஅதேசமயம், இப்பைக் ஹார்னெட் 2.0 மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பு வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதன் விலையும் ஹார்னெட் 2.0 மாடலைக் காட்டிலும் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், நம்பகமான தொடர்புகளின் வாயிலாக தற்போது வெளியாகியிருக்கும் அனைத்து தகவல்களும் வெளி வந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகும்பட்சத்தில் ஹீரோவின் மலிவு விலை அட்வென்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலுக்கு கடுமையான போட்டியை அது வழங்கும்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








