இது இந்திய தயாரிப்புங்க... 502 சதவீத விற்பனை வளர்ச்சியில் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம்!
502 சதவீத விற்பனை வளர்ச்சியை பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

குஜராத் மாநிலம் வதோதராவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஜாய் இ-பைக் (Joy e-Bike). இந்நிறுவனம் வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (WardWizard Innovations and Mobility Ltd) நிறுவனத்தின் ஓர் அங்கமாகும்.

இந்த நிறுவனமே இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 2020 அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 2021 அக்டோபரில் 502 சதவீத விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருக்கின்றது.

நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,855 யூனிட் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இதே நிறுவனம், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 474 யூனிட் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதைவிட பல மடங்கு 2021 அக்டோபரில் நிறுவனம் விற்பனைச் செய்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவின் மின் வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த விற்பனை வளர்ச்சியை நிறுவனம் போன மாதம் மட்டுமே பெற்றிருக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியை ஜாய் இ-பைக் பெற்று வருகின்றது. அந்தவகையில் முன்னதாக நிறுவனம் 13 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம், தற்போது உயர் திறன் பைக்கின்கீழ் இ-மான்ஸ்டர், ஸ்கைலைன், தண்டர்போல்ட், ஹர்ரிகேன் மற்றும் பீஸ்ட் ஆகிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும், குறைந்த திறன் வெளிப்பாடு கொண்ட மின்சார ஸ்கூட்டர்களாக ஜாய் இ-பைக் உல்ஃப், ஜாய் இ-பைக் க்ளோப், ஜென் நெக்ஸ்ட் நன்கு இ-ஸ்கூட்டர் மற்றும் மான்ஸ்டர் இ-பைக் ஆகிய மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே 2021 அக்டோபர் மாதத்தில் 502 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. இதில், மிக அதிக திறன் கொண்ட இ-மோட்டார்சைக்கிளாக இ-மான்ஸ்டர் இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் முன் மற்றும் பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன், சிறந்த ரேஞ்ஜ் திறன் வெளிப்பாட்டிற்காக 72 V, 39 AH திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜாக 5 மணி நேரங்கள் தொடங்கி 5.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

மேலும், முழுமையாக சார்ஜாக வெறும் 3.3 யூனிட் மின்சாரத்தை மட்டுமே செலவு செய்யும். எனவே ஒரு கிமீ பயணிக்க 23 பைசா மட்டுமே செலவாகும். பெட்ரோல் இருசக்கர வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக சேமிப்பு கொண்ட வாகனமாக இ-மான்ஸ்டர் மின்சார பைக் காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான வசதிகள் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை ஜாய் இ-பைக் அதன் பிராண்டின்கீழ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








