மீண்டும் கால் தடம் பதிக்கிறது LML... ஓலா, ஏத்தர், பஜாஜ் மின்சார வாகனங்களுக்கு போட்டி ரொம்ப தொலைவில் இல்லை!
பிரபல LML நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

1970ஸ் மற்றும் 80ஸ் -களில் இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய நிறுவங்களில் எல்எம்எல் (LML) பிராண்டும் ஒன்று. உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை மையமாகக் கொண்டு இயங்கிய இந்நிறுவனம் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் ரக வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வந்தது.

இத்துடன், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் அக்ஸசெரீஸ் தயாரிப்பு உள்ளிட்டவற்றையும் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, 1983ம் ஆண்டுகளில் இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பியாஜியோ வெஸ்பா (Piaggio Vespa) நிறுவனத்துடன் இணைந்து 100சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களை உருவாக்கத் தொடங்கியது.

பியாஜியோ வெஸ்பா உடனான கூட்டணி டெக்னிகல் சார்ந்த உதவிக்காக மேற்கொள்ளப்பட்டது. இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனையில் நல்ல வெற்றியைக் கண்டன. இதற்கு எல்எம்எல் பிராண்டில் விற்பனைக்கு வந்த செலக்ட் மற்றும் ஸ்டார் ஆகிய வாகனங்களே மிக சிறந்த உதாரணம்.

இருப்பினும், சில காரணங்களால் நிறுவனம் தனது வர்த்தகத்தை பின் வாங்கியது. இந்த நிலையில் மீண்டும் எல்எம்எல் பிராண்ட் இந்தியாவில் வாகன விற்பனையைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "மிகவும் உறுதியான கால்தட பதிப்பை செய்ய இருப்பதாக" தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டிருக்கின்றது. இதனை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மின் வாகனங்களுக்கு சிறப்பு மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை அரசுகள் வழங்கி வருகின்றன. இத்துடன், மின் வாகன தயாரிப்பாளர்களும் தங்களின் பங்காக சில சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே இந்தியாவின் மின் வாகன துறையில் கால் தடம் பதிக்க இருப்பதாக எல்எம்எல் பிராண்ட் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. பூஜ்ஜியம் உமிழ்வு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதற்காக மிகப்பெரிய முதலீடு செய்யப்பட இருக்கின்றது. மேலும், முதலீட்டாளர்களையும் நிறுவனம் வரவேற்றிருக்கின்றது.

எனவே மிக விரைவில் எல்எம்எல் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போட்டியாக பழைமை மாறா உருவ தோற்றத்தில் அவை எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








