முதல் உலக போர் முடிவும்... மோட்டோ குஸ்ஸி பிராண்டின் துவக்கமும்!! வெற்றிகரமாக 100 ஆண்டுகள் நிறைவு!
பெரும்பான்மையான நாடுகளில் வணிகத்தை விரிவுப்படுத்தியுள்ள மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வெற்றிகரமாக 100 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பியாஜியோ க்ரூப்பின் ஒரு அங்கமான இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்ட், மோட்டோ குஸ்ஸி தனது நூற்றாண்டு வணிகத்தை கடந்த 2021 மார்ச் 15ஆம் தேதியில் நிறைவு செய்துள்ளது.

மோட்டோ குஸ்ஸி பிராண்ட் புதிய எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்புகளின் மூலமாக அதன் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் புதுப்பித்துள்ளது. இதன் விளைவாக கிடைத்துவரும் வெற்றியினை கொண்டாடும் இந்த நேரத்தில் தான் இத்தகைய பிரம்மாண்ட் மைல்கல்லை அடைந்துள்ளது.

சிறகுகளை விரித்தப்படி பறக்கும் கழுகினை லோகோவில் கொண்ட மோட்டோ குஸ்ஸி நிறுவனத்தை நிறுவிய நிறுவனர்களான கார்லோ குஸ்ஸி மற்றும் ஜார்ஜியோ பரோடி முதல் உலக போரின்போது இத்தாலியன் ராயல் கடற்படையின் விமான பிரிவில் பணியாற்றியவர்கள் ஆவர்.

ஆனால் அப்போதே, முதல் உலக போரில் நாட்டிற்காக சேவையாற்றி கொண்டிருந்த போதே, போர் முடிந்தவுடன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுப்பட வேண்டும் என்று இவர்கள் இருவர் மற்றும் விமானி ஜியோவானி ரவெல்லி என மூவரும் திட்டமிட்டுவிட்டனர்.

ஆனால் ரவெல்லி தனது மோட்டார்சைக்கிள் தயாரிப்பு கனவை நிறைவு செய்யாமலே 1919ல் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இருப்பினும் அதன் பின் இரண்டே வருடங்களில் மோட்டோ குஸ்ஸி நிறுவனம் கார்லோ குஸ்ஸி மற்றும் ஜார்ஜியோ பரோடியால் நிறுவப்பட்டது.

இந்த நூறாண்டுகளில் மோட்டோ குஸ்ஸி நிறுவனம் உலகம் முழுவதிலும் பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்டு 14 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளது. அதிவேகமான மோட்டார்பைக்கை தயாரித்து உலகளவில் கவனத்தை பெற்ற இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டாக மோட்டோ குஸ்ஸி உருவெடுத்தது.

இதனால் இத்தாலியில் இராணுவம் மற்றும் போலீசார் பயன்பாட்டிற்கு பல மோட்டோ குஸ்ஸி பைக்குகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன. இத்தாலி உடன் இந்த நிறுவனத்தின் பிரபலம் நின்று போகவில்லை, மாறாக, கலிஃபோர்னியா போலீசாரின் ரோந்து பணிகளுக்காக வழங்கப்பட்டது உள்பட சர்வதேச அளவிலும் தனக்கான ஒரு இடத்தை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் கூட ஜெர்மனியின் பெர்லீன் போலீஸ் துறைக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடான ஜோர்டனுக்கு என ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு மோட்டோ குஸ்ஸி பைக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் பிரதமருக்கான பாதுகாப்பு படை வீரர்களின் வாகனமாக மோட்டோ குஸ்ஸி பைக்குகள் இன்றளவும் இருந்து வருகின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் மோட்டோ குஸ்ஸி பைக்குகள் தொலைத்தூர பயணத்திற்கான வாகனங்களாகவே பார்க்கப்பட்டன.

மோட்டோ குஸ்ஸி பைக்குகள் மீதான இந்த பார்வையை 1928ல் கியூசெப் குஸ்ஸி ஆரம்பித்து வைத்தார். அவர் தனது ஜிடி "நோர்ஜ்"-இல் ஆர்டிக் துருவத்தினை சென்றடைந்து இத்தாலியர்கள் அனைவரையுமே பிரம்மிக்க வைத்தார்.

இத்தகைய நிறுவனத்தை தற்சமயம் நிர்வகித்துவரும் ஐரோப்பாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் கட்டமைப்பு நிறுவனமான பியாஜியோ க்ரூப், மோட்டோ குஸ்ஸி பைக்குகளின் உண்மையான தோற்றத்தினையும், திறனையும் புது புது மோட்டார்சைக்கிள்களின் மூலமாக பாதுகாத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








