ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
மின்சார வாகனங்களுக்காக உலகின் மிகப்பெரிய ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கை அமைக்க இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாடகை கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஓலா டாக்சி நிறுவனம் விரைவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்க உள்ளது. இதற்காக, ஓசூரில் பிரம்மாண்ட தொழிற்சாலையையும் அமைத்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக மிகப்பெரிய அளவில் தனது இருசக்கர மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா முடிவு செய்துள்ளது. ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் என்று அந்நிறுவனம் குறிப்பிடும் இந்த மாபெரும் திட்டத்தின்படி, 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க ஓலா திட்டமிட்டுள்ளது.

மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர்த்தகத்தை துவங்கும் முதல் ஆண்டு காலத்தில் 5,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வகையில், மிக நெருக்கமான அளவில் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள், சார்ஜ் பற்றிய கவலை இல்லாமல் வாங்குவதற்கான வாய்ப்பை பெற முடியும். மேலும், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை 18 நிமிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றுவிட முடியும். இதன்மூலமாக, 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும் என்று ஓலா தெரிவித்துள்ளது.

இதனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. பெரிய நகரங்களில் தானியங்கி முறையில் ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது.

சார்ஜ் ஏற்றுவதற்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், அடுக்குமாடி கொண்ட சார்ஜ் ஏற்றும் நிலையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன்முலமாக, ஒரே நேரத்தில் பல ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்றும் வாய்ப்பு கிடைக்கும். பெரு நகரங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலும் இந்த மல்டிலெவல் பார்க்கிங் கட்டமைப்பு மூலமாக எளிதாக சார்ஜ் ஏற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் திட்டம் குறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் கூறுகையில்,"போக்குவரத்தில் மின்சார வாகனங்கள்தான் எதிர்காலமாக மாற உள்ளது. எனவே, மின்சார வாகனங்கள் மூலமாக போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த விழைந்துள்ளோம்.

உலகின் மிகப்பெரிய சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைப்பதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் எளிதாக மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும், இது எங்களது மிக முக்கிய விஷயமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








