நவம்பரில் இருந்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்போது டெலிவிரி எடுக்கலாம் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தமிழகத்தில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வருகின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

அறிமுகத்திற்கு முன்னதாகவே ஓலா இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் முதற்கட்டமாக இரண்டு நாட்களுக்கு துவங்கப்பட்டன. இருப்பினும் இந்த இரண்டு நாட்களிலேயே ரூ.1,100 கோடிக்கான வணிகம் முன்பதிவுகளில் முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அதாவது நிமிடத்திற்கு 4 இ-ஸ்கூட்டர்கள்.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட முன்பதிவுகள் வருகிற நவம்பர் 1ஆம் தேதி, தீபாவளிக்கு முன்னதாக துவங்கவுள்ளன. இந்த நிலையில் தான் தற்போது இரண்டாம் கட்ட முன்பதிவுகள் முடிந்து, தீபாவளியெல்லாம் முடிந்த பின்னர் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ட்ரைவ் செய்யலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகுன்ஞ் சங்கி என்பவரது டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், டெஸ்ட் ட்ரைவ்கள் வருகிற நவம்பர் 10ஆம் தேதியில் இருந்து துவங்கும் என தன் பதில் கருத்தில் கூறியுள்ளது. ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையே, ஆன்-ரோடு விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும்.

சிங்கிள் சார்ஜில் 120கிமீ தூரத்திற்கு இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்1 மாடலை 10 விதமான நிறத்தேர்வுகளில் பெற முடியும். எஸ்1 இ-ஸ்கூட்டரில் 3.97 kWh பேட்டரி தொகுப்பு கொண்ட 8.5 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதனை காட்டிலும் கூடுதல் செயல்திறன்மிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் தான் இதன் விலை சற்று அதிகமாக ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 180 கிமீ தூரத்திற்கு இயங்கக்கூடியது. இதற்கு எஸ்1 ப்ரோ-வில் பொருத்தப்படும் அளவில் சற்று பெரிய பேட்டரி தான் முக்கியமான காரணம். இதனால் இந்த மாடலில் அதிகப்பட்சமாக மணிக்கு 115 kmph வேகத்தில் செல்லலாமாம்.

டெஸ்ட் ட்ரைவ்கள் அடுத்த நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கினாலும், ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க அடுத்த 2022 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஆகிவிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுவரும் ஓலா எலக்ட்ரிக்கின் எதிர்கால தொழிற்சாலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இந்தியா உள்பட உலகளவில் மிக பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக கட்டமைக்கப்பட்டுவரும் இதில் மகளிர் தான் பெரும்பான்மையாக பணியாற்றவுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

கடந்த 6 மாதங்களாக கட்டமைக்கப்பட்டுவரும் இந்த தொழிற்சாலையில் மொத்தம் 10,000 பெண் தொழிலாளர்கள் பணியாற்றவுள்ளனராம். தொழிற்சாலை முழுவதுமாக கட்டமைக்கப்பட்டால், ஆரம்பத்தில் இருந்தே வருடத்திற்கு 20 லட்ச ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஃபால்கன் எட்ஜ், சஃப்ட்பேங்க் உள்ளிட்டவற்றிடம் இருந்து 200 மில்லியன் டாலர்களை முதலீட்டிற்காக கேட்டுள்ளதாக ஓலா சமீபத்தில் அறிவித்திருந்தது. கடன் வழங்குபவர்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மொத்த மதிப்பை சுமார் 3 பில்லியன் டாலர்களாக மதிப்பீடு செய்துள்ளனர். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் வெறும் ரூ.500 என்ற டோக்கன் தொகையுடன் துவங்கப்பட்டன.

இந்த குறைவான டோக்கன் தொகையே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விளம்பரமாக அமைந்துவிட்டது. இதனால், முன்பதிவுகள் துவங்கப்பட்ட இரண்டு மணிநேரத்திற்கு உள்ளாகவே 1 லட்ச முன்பதிவுகளை கடந்துவிட்டதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். அதன்பின் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு முன்பதிவுகள் மேலும் குவிந்தன.இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனைக்கு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் விற்பனையில் உள்ள பஜாஜ் சேத்தக் உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








