4 மாதங்களில் நடந்த மேஜிக்... இறுதிக்கட்டத்தை எட்டியது கட்டுமானப் பணிகள்... ஓலா ஆலையில் விரைவில் உற்பத்தி!
ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், தொழிற்சாலையின் முதல் படத்தை அந்நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். மேலும், இங்கு மிக விரைவில் உற்பத்திப் பணிகளும் துவங்கப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.

டாக்சி மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஓலா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. முதல் மாடலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை களமிறக்க உள்ளது. மேலும், தனது மின்சார வாகன உற்பத்திக்காக ஓசூர் அருகே மிகப்பெரிய வாகன ஆலையை ஓலா அமைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில், வெறும் 4 மாதங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையின் கட்டுமானப் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஓலா மின்சார வாகன ஆலையின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான படத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

மேலும், திட்டமிட்டப்படி குறித்த காலத்தில் ஆலையின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதையும் குறிப்பிட்டு, கட்டுமானப் பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு பாராட்டடுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இங்கு உற்பத்திப் பணிகள் துவங்க இருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே, மற்றொரு சமூக வலைதள பதிவில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்தெந்த வண்ணத் தேர்வுகளை கொடுக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்குமாறு தனது ஃபாலோயர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, அடுத்த சில வாரங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தக்கவாறு, ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியையும் துவங்குவதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது.

ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேரடியாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

தமிழக ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டருடன் மிகப்பெரிய வர்த்தக திட்டத்துடன் மின்சார வாகனத் தயாரிப்புத் துறையில் ஓலா நிறுவனம் இறங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








