ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிய தமிழக நிறுவனம்... இத யாருக்காக வாங்கியிருக்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பயனியர் ஆசியா குழுமம் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கியிருக்கின்றது. இதை யாருக்காக வாங்கியிருக்கு என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

பட்டாசு தயாரிப்பிற்கு பெயர்போன நகரமான சிவகாசியை மையமாகக் கொண்டு இயங்கும் பயனியர் ஆசியா குரூப், தங்களின் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 12 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவையனைத்தும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மின்சார ஸ்கூட்டர்கள் ஆகும். ஹீரோ நிறுவனம் மிக சமீபத்தில் நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆப்டிமா எச்எக்ஸ் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரை பயனியர் ஆசியா குரூப் தற்போது வாங்கியிருக்கின்றது.

சிட்டி ஸ்பீடு வேரியண்டில் இருக்கும் தேர்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரைக் களமிறக்கியது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியிலும் நிறுவனங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அண்மையில், தனியார் டெலிவரி மற்றும் வாடகை சேவை நிறுவனம் ஒன்று ஆயிரம் அலகு ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டர்களை வாங்கியிருந்தது. இந்த நிலையிலேயே பயனியர் ஆசியா குழுமம் 12 புதிய மின்சார ஸ்கூட்டர்களை வாங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தமாக 400க்கும் அதிகமான நபர்கள் பணிபுரிகின்றனர்.

ஆகையால், எதிர்காலத்தில் இன்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டர்களை பயனியர் ஆசியா கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ ஷோகிந்தர் கில் கூறியதாவது, "பயனியர் ஆசியாவுடன் கூட்டணி சேர்வதில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. பணியாளர்களுக்கு பசுமை வாகனங்களை வழங்கும் நோக்கில் இந்த கூட்டணி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் ஸ்மூத்தமான, திறமையான மற்றும் அதிக ரேஞ்ஜை வழங்கக்கூடியவை" என தங்களின் தயாரிப்பிற்கு பெறுமைச் சேர்த்தார். ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்கள் ரூ. 71,950 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் 550வாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மின் திறனை வழங்கும் பொருட்டு 51.2வோல்ட் / 30ஏஎச் லித்தியம் அயன் பேட்டரியைப் பொருத்தியிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 82 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 42 கிமீ வேகம் ஆகும். இந்த மின்சார இருசக்கர வாகனத்தில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் வாகன ஆர்வலர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் மத்தியில் இந்நிறுழனத்தின் தயாரிப்புகளுக்கு ஏகபோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








