அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங் நிறுத்தம்! ரிவோல்ட் அதிரடி! இதற்கான காரணம் தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க
அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங்கை ரிவோல்ட் நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் மிகக் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை புதிய வாகன விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு நிலவிய மாதத்தில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட விற்பனை இலக்கை எட்ட முடியாமல் தவித்தன. மிகக் கடுமையாக விற்பனை சரிவையும் அவைச் சந்தித்தன.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகன சந்தை சந்தித்து வரும்நிலையில், ரிவோல்ட் மோட்டார்ஸ் அதன் புகழ்வாய்ந்த மின்சார இருசக்கர வாகனமான ஆர்வி400 மாடலுக்கான புக்கிங்கைத் தொடங்கியது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே நிறுவனம் மின்சார பைக்கிற்கான புக்கிங்கை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு அதிகளவில் புக்கிங் கிடைத்ததே காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆமாங்க, விற்பனைக்காக நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து யூனிட்டுகளுக்கும் 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே புக்கிங் கிடைத்திருக்கின்றது.

இந்த அமோக வரவேற்பை அடுத்தே ரிவோல்ட் ஆர்வி 400 மின்சார பைக்கிற்கான புக்கிங் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கும் மானியத்தை அதிகரிக்கச் செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலையும் கணிசமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ. 28 ஆயிரம் வரை எலெக்ட்ரிக் பைக்கின் விலை குறைக்கப்பட்டது.

ஆகையால், தற்போது ரிவோல்ட் ஆர்வி 400 ரூ. 91 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுவும், பைக்கிற்கு அமோகமான வரவேற்பு கிடைக்க ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக ரிவோல்ட் ஆர்வி ரூ. 1.19 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரு மின்சார மோட்டார்சைக்கிளுக்கும் மீண்டும் புக்கிங் தொடங்கப்படும் என்றும் ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு மின்சார பைக்கை டெலிவரி செய்யும் பணியை துரிதப்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது. இதனடிப்படையில், முன்பதிவுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இது தொடங்கப்பட்ட 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே முடிவடைந்துள்ளது. ஆன்லைன் வாயிலாகவே அனைத்து மின்சார மோட்டார்சைக்கிளுக்கமான புக்கிங்கும் கிடைத்திருக்கின்றது. தற்போது கிடைத்திருக்கும் ஒட்டுமொத்த புக்கிங்கின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். இதுகுறித்த தகவலை நிறுவனம் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.

தற்போது ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், சென்னை, புனே, மும்பை, டெல்லி, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைத்து வருகிறது.

தற்போது புக்கிங் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சார பைக்கை டெலிவரி வழங்கப்பட இருப்பதாக ரிவோல் அறிவித்துள்ளது. எப்போது டெலிவரி வழங்கப்படும் என்கிற தகவலை அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தின் வாயிலாக வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








