3 புதுமுக மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்தை உறுதி செய்த ராயல் என்பீல்டு... போட்டியாளர்களை ஓரங்கட்ட அதிரடி!!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 3 புதுமுக பைக்குகள் அறிமுகமாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலகின் மிக பழமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. தற்போது உலக நாடுகளிலும் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு தனித்துவமான வரேவற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

எனவேதான் வரும் காலங்களில் ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக நிறுவனம் மிக சமீபத்தில் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, தற்போது கிடைத்து வரும் வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியிலும் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக மூன்று புதுமுக இருசக்கர வாகனங்களை நிறுவனம் மிக விரைவில் களமிறக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை நிறுவனத்தின் முதன்மை செயலாக்க அதிகாரி (சிஇஓ) வெளியிட்டதாக மணி கன்ட்ரோல் எனும் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

நடப்பாண்டிலேயே அந்த மூன்று புதுமுக இருசக்கர வாகனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலையும் செய்தி தளம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரி கூறியிருப்பதாவது, "எங்களிடத்தில் உற்சாகம் மிகுந்த தயாரிப்புகள் உள்ளன. இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான புதுமுக வாகனங்களை ராயல் என்பீல்டு இடம் இருந்து பார்க்கலாம். இது வெறும் ஆரம்பம் மட்டுமே." என கூறியுள்ளார்.

தொடர்ந்து, "ஒவ்வொரு காலாண்டிற்கும் ஓர் புதிய மாடல் களமிறக்கப்பட இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் காரணத்தால் புதிய வாகனங்களின் அறிமுகம் சற்று தள்ளிபோயிருக்கின்றது. மிக விரைவில் பிரமாண்ட மாடல்களின் அறிமுகம் செய்யப்படும். இந்த நாளை நோக்கி நாங்கள் காத்திருக்கின்றோம்" என அவர் கூறியிருக்கின்றார்.

எனவே மிக விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதுமுக இருசக்கர வாகனங்களை இந்தியாவில் களமிறக்குவது உறுதியாகியுள்ளது. ராயல் என்பீல்டு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படும் புதுமுக மாடல்கள் ஏற்கனவே சில மறைப்புகளுடன் கேமிராவில் கண்களில் சிக்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, புதுப்பித்தல்களுடன் உருவாகியிருக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பலமுறை கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இந்த பைக் வேற லெவல் மாறுதல்களுடன் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியாகிய ஸ்பை படங்கள் இருக்கின்றன.

புகைப்படத்தில் புதிய நிறத்திலான இருக்கை, சற்று உயரமான ஹேண்டில் பார் மற்றும் பல சிறப்பு வசதிகளும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பழைய தலைமுறையில் இருப்பதைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, ஷாட்கன், ஹண்டர் 350 உள்ளிட்ட பைக்குகளும் அண்மையில் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அடுத்தடுத்தாக இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் இருசக்கர வாகனங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








