பாதியாக குறைந்த ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகளின் விற்பனை!! ஆனால், வெளிநாட்டு ஏற்றுமதி 52% உயர்வு!
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் 2021 செப்டம்பர் மாத விற்பனை 33,529ஆக குறைந்துள்ளது. ஏனெனில் 2020 செப்டம்பரில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது சுமார் 40 சதவீதம் குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் கிட்டத்தட்ட 60,331 மோட்டார்சைக்கிள்களை இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 33,529 என்ற விற்பனை எண்ணிக்கையில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கை மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை அடங்குகின்றன.

உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 27,233 மற்றும் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 6,296 ஆகும். கடந்த செப்டம்பரில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கையில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மட்டும் 81.22% ஆகும்.

அதேபோல் 33,529 என்ற ராயல் என்பீல்டின் மொத்த விற்பனை எண்ணிக்கையை 350சிசி-க்கு கீழ், 350சிசி-க்கு மேல் என்றும் பிரிக்கலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 350சிசி-க்கு கீழ் உள்ள மோட்டார்சைக்கிள்களை தான் பெரிதாக நம்பியுள்ளது. எந்த அளவிற்கு என்றால், மொத்த விற்பனை எண்ணிக்கையில் ஏறக்குறைய 76.11 சதவீதம், அதாவது 25,520 யூனிட்கள் 350சிசி-க்கு கீழ் உள்ளவை ஆகும்.

மீதி 8,009 யூனிட்கள் மட்டுமே 350சிசி-க்கு மேல் உள்ளவை. ஆனால் உண்மையில் கடந்த மாதத்தில் ராயல் என்பீல்டின் 350சிசி-க்கு கீழ் உள்ள மோட்டார்சைக்கிள்களின் விற்பனை தான் சுமார் 53.12 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் 2020 செப்டம்பரில் 53,434 யூனிட் >350சிசி பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஆனால் மறுப்பக்கம் 350சிசி-க்கு மேலான பைக்குகளின் விற்பனையில் 35.81% உயர்வை ராயல் என்பீல்டு கண்டுள்ளது. 350சிசி-க்கு மேல் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 என்ற பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ராயல் என்பீல்டு தயாரிக்கும் பெரும்பாலான 650சிசி பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகளின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது.

350சிசி பைக்குகளின் விற்பனை குறைந்துள்ளதினால் தான், ராயல் என்பீல்டின் உள்நாட்டு விற்பனையும் 51.54% குறைந்துள்ளது. 2020 செப்டம்பர் மட்டுமின்றி, இந்த நிறுவனத்தின் 2021 செப்டம்பர் மாத விற்பனை இதற்கு முந்தைய 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் குறைவாக உள்ளது.

ஏனெனில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 45,860 மோட்டார்சைக்கிள்களை உள்நாட்டிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 350சிசி-க்கு மேலான ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனையை தவிர்த்து மற்றவை அனைத்தும் (350சிசி-க்கு கீழ், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) கணிசமாக குறைந்துள்ளன.

மொத்தமாக கடந்த ஒரு வருடத்தில் (2020 அக்டோபர்- 2021 செப்டம்பர்) 2,47,067 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை இதற்கு முந்தைய ஒரு வருடத்துடன் (2019 அக்டோபர்- 2020 செப்டம்பர்) ஒப்பிட்டு பார்த்தோமேயானால், 19% குறைவு. ஏனென்றால் அந்த ஒரு வருடத்தில் 2,08,078 ராயல் என்பீல்டு வாகனங்களே விற்கப்பட்டு இருந்தன.

இதில் குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி சுமார் 222 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-2020 வருடத்தில் வெறும் 11,443 யூனிட் பைக்குகளையே ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மொத்தம் 36,797 மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய வருடத்தில் ஏற்றுமதி வெகுவாக குறைந்திருந்ததற்கு காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், கொரோனா வைரஸ்.

அதுமட்டுமின்றி, உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான தேவையும் இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பை வெகுவாக பாதித்து வருகிறது. குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் அவற்றை பயன்படுத்தி வாகனங்கள் உற்பத்தியில் அறிமுகப்படுத்தப்படும் சில்லுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா பரவல் தற்போது அவ்வளவு தீவிரமாக இல்லை. இதனால் குறைக்கடத்திகள் பற்றாக்குறை தான் ராயல் என்பீல்டு விற்பனை கடந்த 2021 செப்டம்பரில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதற்கு காரணமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








