"நில அதிர்வு போல இருக்கு"... தொடர் புகார் எதிரொலி ஜிக்ஸெர்250, எஸ்எஃப்250 பைக்குகளை திரும்பி அழைக்கும் சுசுகி!
தொடர் புகார் எதிரொலியால் ஜிக்ஸெர்250, எஸ்எஃப்250 மாடல் பைக்குகளை சுசுகி நிறுவனம் திரும்பி அழைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ஆகிய இரு மாடல்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனத்தில் ஏற்படும் அதிகப்படியான அதிர்வின் காரணமாக இந்த நடவடிக்கையில் சுசுகி களமிறங்கியிருக்கின்றது.

இதற்கு தொடர் புகாரும் ஓர் காரணம் என கூறப்படுகின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களாக ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடல் பைக்குகள் இருக்கின்றன. இந்த பைக்குகள் பயணத்தின் போது அதிக அதிர்வை வழங்குவதாக வாடிக்கையாளர்கள் சிலர் தொடர் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த பிரச்னையைச் சரி செய்யவதற்காகவே சுசுகி நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடல் பைக்குகளை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. 2019 ஆகஸ்ட் 12 மற்றும் 2021 மார்ச் 21 ஆகிய நாட்களில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கே நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 199 யூனிட்டுகள் இந்த அழைப்பின் மூலம் பயனடைய இருக்கின்றன. எஞ்ஜினில் இருக்கும் பேலண்ஸர் உலோக தண்டு (balancer shaft) முறையற்ற நிலையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனாலயே வழக்கமானதைக் காட்டிலும் அதிர்வு அதிகளவில் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.

இதனையே தனது தற்போதைய அழைப்பின் வாயிலாக சீர் செய்ய சுசுகி திட்டமிட்டிருக்கின்றது. அழைப்புகுறித்த தகவலை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல்கள் வாயிலாக சுசுகி அனுப்பி வைத்து வருவதாகக் கூறப்படுகின்றது.

தற்போது, கோவிட்-19 வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதால் குறைந்தபட்ச எண்ணிக்கையிலேயே பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. ஆகையால், கோளாறு சரி செய்யும் பணி சற்று கால தாமத்துடன் நிறைவற்றப்படலாம் என தெரிகின்றது.

ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ஆகிய இரு பைக்குகளிலும் 249சிசி திறன் கொண்ட 4 வால்வ் எஸ்ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்ஜின் 26.13 பிஎச்பி பவரை 9,300 ஆர்பிஎம்மிலும், 22.6 என்எம் டார்க்கை 7,300 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

சுசுகி நிறுவனம் மிக சமீபத்தில்தான் மேட்-இன் இந்தியா ஜிக்ஸெர் 250 பைக்குகளை ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. அந்நாட்டில் இப்பைக் 4,48,000 யுவான்கள் என்ற மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 3.09 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவில் ரூ. 1.67 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








