“கூட்டணி தொடரும், எலக்ட்ரிக் 2-வீலர்களை உருவாக்கவுள்ளோம்”- டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டாக சேர்ந்து அறிவிப்பு!!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஆகியவை எதிர்கால தொழிற்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கும் கூட்டணியை விரிவுப்படுத்துவதாக கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய சந்தையில் உள்ள வெற்றிக்கரமான கூட்டணிகளுள் டிவிஎஸ் மோட்டார் & பிஎம்டபிள்யூ க்ரூப்பும் ஒன்று. ஏனெனில் இந்த கூட்டணியின் விளைவால் உருவான 310சிசி என்ஜின் டிவிஎஸ் மோட்டாருக்கும், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கும் நன்மையை தந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டாருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310, புதிய மோட்டார்சைக்கிள் பிரிவில் நுழைவதற்கு துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது. மறுப்பக்கம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கு முதன்மை விற்பனை மாடல்களாக 310 இரட்டை பைக்குகள் (ஜி310 ஆர், ஜி310 ஜிஎஸ்) உள்ளன. முதல்முறையாக ஒரு ஆண்டில் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்களை தற்போது வரையில் இந்த 2021இல் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்த 310 ட்வின் பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கடந்த 2021 அக்டோபரில் தெரிவித்திருந்தது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 10% பிஎம்டபிள்யூ பைக்குகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படக்கூடிய பிஎம்டபிள்யூ பைக்குகளும் அடங்குகின்றன.

இந்த இரு வாகன உற்பத்தியாளர்களுக்கு இடையேயான தொடர்பின் நீண்டகால கிளை மற்றும் உட்பிரிவுகள் என்னென்ன என்பது இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இதில் இருந்து இந்த கூட்டணியின் சகோதரத்துவ தன்மையை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தற்போது பிஎம்டபிள்யூ உடனான தங்களது கூட்டணியை எதிர்காலத்திற்கும் விரிவுப்படுத்தி கொள்வதாக டிவிஎஸ் மோட்டார் அறிவித்துள்ளது.

இந்த கூட்டணியில் அடுத்ததாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் புதிய கான்செப்ட்களை பெற உதவக்கூடிய எலக்ட்ரிக் ப்ளாட்ஃபாரம் உருவாக்கப்படலாம். இதனால் இன்னும் 2 வருடங்களுக்குள் இந்த கூட்டணியில் இருந்து முதல் எலக்ட்ரிக் வாகனத்தை எதிர்பார்க்கலாம். தற்போதைய 310சிசி பைக்குகளின் தயாரிக்கும் முறையினை அடிப்படையாக கொண்டு 500சிசி அல்லது அதற்கு கீழ் சிசி கொண்ட பைக்குகளும் உருவாக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு கருத்து தெரிவிக்கையில், எங்கள் 9 ஆண்டுகால கூட்டணியில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பொதுவான முக்கிய மதிப்புகளை நாங்கள் எப்போதும் போற்றுகிறோம். தரம், பொறியியல் திறன், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். இதுவரையில் வந்துள்ள அந்த மூன்று தயாரிப்புகள் இந்த வெற்றி கூட்டணிக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

எதிர்கால இயக்கமானது மின்சார இயக்கம் உட்பட மாற்று தீர்வுகளை உள்ளடக்கியது. இந்த வெற்றிக்கரமான கூட்டணியை எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிற புதிய தளங்களுக்கு விரிவுப்படுத்துவதன் மூலம் மேம்பட்ட தொழிற்நுட்பம் மற்றும் கவர்ச்சிக்கரமான தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் மற்றும் இரு நிறுவனங்களுக்கும் மதிப்புமிக்க ஒருங்கிணைப்பை கொண்டுவரும்” என்றார்,

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மர்கஸ் ஸ்க்ராம் கருத்து தெரிவிக்கையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான எங்களின் பயனுள்ள கூட்டணியில், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்பட புதிய இயக்குதளங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களை இணைந்து தயாரிக்கவுள்ளதை உள்ளடக்கி, எங்களது நீண்ட கால கூட்டணியை தொடரவுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

உலகம் முழுவதிலுமே எதிர்கால போக்குவரத்து மின்சார வாகனங்களை நம்பியே உள்ளது. எரிபொருள் என்ஜின் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவது என்பது பல ஆட்டோமொபைல் நிறுவனங்களால் எளிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கான்செப்ட்களும், யோசனைகளும் மிக விரைவாகவே இவி-களக மாறிவிடுகின்றன. எலக்ட்ரிக் வாகனங்கள் காலத்தின் கட்டாயம் ஆகும்.

இந்தியா உள்பட பல உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. புவியின் சராசரி வெப்ப நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதற்கு வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் புகையும் ஒரு காரணமாகும். ஆனால் தற்போது எரிபொருள் என்ஜின்கள் வெளியிடும் புகையின் அளவு பல்வேறு கட்டுப்பாடுகளினால் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனை முழுவதுமாக பூஜ்ஜியமாக்க வேண்டுமென்றால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதுதான் இப்போதைக்கு உள்ள ஒரே வழி. தற்போது விற்பனையில் உள்ள எரிபொருள் என்ஜின் வாகனங்களில் எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி தொகுப்பை பொருத்தி பயன்படுத்தலாம் என்கிற ஒரு வழியும் உள்ளது என்றாலும். இதன்படி இவி-களை உருவாக்குவது சற்று சிக்கலான மற்றும் செலவுமிக்க காரியமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








