எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை தாறுமாறாக குறைகிறது... மோடி அரசு செய்த அந்த தரமான சம்பவம்தான் காரணம்...
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபேம் இந்தியா-2 திட்டத்தில் ஒன்றிய அரசு தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு kWh-க்கும் வழங்கப்படும் மானியம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு ஒரு kWh-க்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வந்தது. பேருந்துகளை தவிர அனைத்து எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கும் இந்த புதிய மானியம் பொருந்தும்.

ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், இந்தியா முழுக்க தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்துள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரின் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை தற்போது 11,250 ரூபாய் குறைந்துள்ளது. டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.

தற்போது டெல்லியில் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை 1.01 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்கள், டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1.10 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும். டெல்லியில் விலை குறைவாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளன.

டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கூடுதல் மானியங்களை வழங்கி வருகிறது. இதனால்தான் டெல்லியில் விலை குறைவாக இருக்கிறது. மானியங்களை கூடுதலாக வழங்குவதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை இன்னும் நன்கு குறைந்து, அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என்பது டெல்லி அரசின் எண்ணம். இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை டெல்லி மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மாநிலங்களில், டெல்லி முதன்மையானதாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டியிட்டு வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் 20 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது திட்டமிட்டு வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்துள்ளதால், டிவிஎஸ் நிறுவனத்தால் வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும்.

டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சென்னை, மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் ஐதராபாத் உள்பட 20 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடுமையான சவால் இருக்கப்போகிறது என்பது உண்மை.

ஆம், பஜாஜ் நிறுவனமும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் பல்வேறு புதிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்குள் இந்தியாவில் மேலும் 30 புதிய நகரங்களில், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட வேண்டும் என பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








