TVS-Tata Power கூட்டணி... இரு நிறுவனங்களின் இணைவு எதுக்கு தெரியுமா? இனி அந்த வாகனங்களை தயக்கமில்லாம வாங்கலாம்!
நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களான டிவிஎஸ் (TVS) மற்றும் டாடா பவர் (Tata Power) ஆகிய இரண்டும் ஓர் தரமான சம்பவத்திற்காக இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணைவு எதற்காக என்பது பற்றிய முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் நிறுவனங்களில் ஒன்றான டாடா பவருடன் (Tata Power) ஓர் ஒப்பந்தத்தைப் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மின் வாகனங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயரத் தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாக நம்மால் சாலையில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் காண முடிகின்றது. பச்சை நிற நம்பர் பிளேட்டுடன், சைலென்சர் சத்தமே இல்லாமல் சர்ரென எலெக்ட்ரிக் வாகனங்கள் நாட்டின் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இவற்றால் கிடைக்கும் பயன் அதிகம் என கூறப்படுகின்றது. குறிப்பாக, காற்று மாசுபாடு என்பதே இல்லை என அறிவியலாளர்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கப்பம் கட்டுகின்றனர். இத்துடன், எரிபொருளால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பராமரிப்பது மிகவும் குறைவான செலவையே வழங்கும் எனவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஒரு சிலர் மின் வாகனங்களின் இயக்கத்திற்கு மாற சற்று தயக்கம் காட்டிய வண்ணம் இருக்கின்றனர். போதியளவு அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். நாட்டில் பெட்ரோல் பங்க்குகள் இருக்குமளவிற்கு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் இல்லை என்பதே உண்மை. பெரு நகரங்களிலேயே இந்த நிலை தென்படுகின்றது. முக்கியமான மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மட்டுமே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் உள்ளன.

அதுவும் குறைந்த எண்ணிக்கையிலேயே அவை உள்ளன. எனவேதான் மக்கள் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையைக் களைக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் சில பிரத்யேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே டிவிஎஸ் மோட்டார் மற்றும் டாடா பவர் ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன.

இரு நிறுவனங்களும் சேர்ந்து கூட்டிணைவின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருக்கின்றன. மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இத்துடன், டிவிஎஸ் மோட்டார் செயல்படும் இடங்களில் சோலார் பவர் தொழில்நுட்பங்களைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளும் இந்த கூட்டணியின்கீழ் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "இந்தியாவில் மின்வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதே இந்த கூட்டணியின் நோக்கமாகும். இதற்காக நாட்டில் பிரத்யேக மின்சார இருசக்கர வாகனங்களஉக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. சார்ஜிங் மையங்களை எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிரத்யேக செயலிகள் அறிவிக்கப்படும்.

இதனை டிவிஎஸ் ஐக்யூப் பயனர்கள் ஸ்கூட்டருக்கான செயலியின் வாயிலாகவும், டாடா பவர் இஇசட் சார்ஜ் செயலி வாயிலாகவும் அறிந்துக் கொள்ள முடியும். கூட்டணி ஒரு வழக்கமான ஏசி சார்ஜிங் நெட்வொர்க் மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிச்சயம் நாட்டில் மின்வாகன தத்தெடுப்பை ஊக்குவிக்க உதவும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசற்ற வாகன இயக்கத்தை அதிகரிக்கப்படுத்துவதைப் போல டிவிஎஸ் நிறுவனம் இயங்கும் இருப்பிடங்களில் சோலார் வாயிலாக மின்னாற்றாலை பெறும் வசதியும் உருவாக்கப்பட இருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் அதிகம் பலனடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். சென்னையில் இதன் விற்பனையை மிக சமீபத்திலேயே டிவிஎஸ் தொடங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தலைநகர் டெல்லி, பெங்களூரு, புனே, கொச்சி, கோயம்புத்தூர், ஹைதராபாத், சூரத், விசாகபட்டினம், ஜெய்பூர் மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது. டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் ரூ. 1,15,218 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








