முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டாக உருவெடுக்கும் ஏத்தர்!! 2022 ஜனவரி விற்பனை சுமார் 366% அதிகரிப்பு!
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து, எலக்ட்ரிக் வாகன பயன்பாடு ஸ்கூட்டர்களில் இருந்துதான் ஆரம்பித்துள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும் குறைந்த விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

சற்று பிரீமியம் தரத்திலான இ-ஸ்கூட்டர்களுக்கு இன்னமும் இந்தியர்கள் தயக்கம் காட்டுவது என்னமோ உண்மை. ஆனால் இந்த நிலை எல்லாம் இன்னும் சில காலத்திற்கு மட்டுமே என்பதை கூறும் வகையில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இருப்பினும் இந்த நிறுவனத்திற்கு நமது தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏத்தர் எனர்ஜி அனுப்பி வைக்கிறது. இதனை எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுப்படுத்த இந்த பெங்களூர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 2,825 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இது முந்தைய 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 366% அதிகமாகும். இந்தியாவில் சில்லறை விற்பனை மையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதிகப்படுத்தி வருவதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

இதன்படி, சமீபத்தில் நாக்பூர் மற்றும் லக்னோ நகரங்களில் புதியதாக விற்பனை மையங்களை இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் திறந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை திறனை பற்றி ஏத்தர் எனர்ஜியின் சிபிஓ ரவ்னீட் போகேலா கருத்து தெரிவிக்கையில், ஆட்டோமொபைல் துறையில் பாகங்கள் விநியோக சங்கிலியில் உள்ள சவால்களினால் தேவைக்கு ஏற்ப தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என தெரிவித்துள்ளார்.

சந்தையை விரிவுப்படுத்துவதற்கான தங்களது திட்டங்கள் குறித்து இவர் பேசுகையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய விற்பனை மையங்களை ஏத்தர் திறந்து வருவதாக கூறியுள்ளார். ஏத்தர் எனர்ஜி தற்சமயம் இந்தியாவின் 24 நகரங்களில் 29 சில்லறை விற்பனை மையங்களையும், சுமார் 304 ஏத்தர் க்ரிட் மையங்களையும் கொண்டுள்ளது.

வருட உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க முதலீட்டு தொகையை திரட்டும் பணியில் ஏத்தர் உள்ளது. இதன் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளில் வருட உற்பத்தி எண்ணிக்கையை 1 மில்லியன் ஸ்கூட்டர்களாக அதிகரிக்க முடியும் என மிகவும் நம்பிக்கையாக கூறுகிறார், ஏத்தர் எனர்ஜியின் துணை நிறுவனரும் மூத்த நிர்வாகியுமான தருண் மெஹ்தா.

இதுகுறித்து மெஹ்தா மேலும் பேசுகையில், "பிராண்ட்டை அதிக நகரங்களில் விரிவுப்படுத்துவதில் மட்டும் எங்கள் திட்டம் அடங்கி போகவில்லை. மாறாக, எலக்ட்ரிக்கிற்கு மாறும் வேகத்தையும், சில வருடங்களுக்கு நாங்கள் நினைத்திருந்த விரைவான பாகங்கள் விநியோகம் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பையும் சீரான வேகத்தில் கொண்டு செல்வதிலும் உள்ளது" என்றார்.

சந்தையில் ஏத்தர் பிராண்டில் இருந்து ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஏத்தர் 450ப்ளஸ் என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன. முக்கிய நகரங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏத்தர் க்ரிட் என்கிற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆங்காங்கே நிறுவியுள்ளது. ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி வேறு சில இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் இ-ஸ்கூட்டர்களுக்கும் ஏத்தர் க்ரிட் -இல் சார்ஜ் ஏற்ற முடிகிறது.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்றினை இந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதாவது, வருகிற 2022 ஜூன் மாதம் வரையில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உரிமையாளர்கள் இலவசமாக ஏத்தர் க்ரிட்-டினை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு. எனவே இனி புதியதாக ஏத்தர் இ-ஸ்கூட்டரை வாங்குவோரும் இந்த இலவச திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் இருந்தே நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தின் இணைப்பு வசதியை இலவசமாக வருகிற 2022 மே 15ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பினை ஏத்தர் வெளியிட்டு இருந்தது. ஏத்தர் இணைப்பு வசதியானது கனெக்ட் லைட் மற்றும் கனெக்ட் ப்ரோ என்ற இரு விதமான தேர்வுகளில் மாத சந்தா திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








