போற போக்கைப் பார்த்தா ஓலாவை எல்லாம் கீழே தள்ளிவிடும் போலயே... அபார வளர்ச்சியில் ஏத்தர் நிறுவனம்...
ஏத்தர் நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்நிறுவனம் ஒரே ஆண்டில் 247 சதவீத வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் முன்னோடியான நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள அம்சங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனாலேயே மக்கள் பலர் இந்த ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூருவை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் பெரும் அளவில் புகழ் பெற்றுவிட்டது எனச் சொல்லலாம்.

இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டர் மொத்தம் 247 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் ஸ்கூட்டரின் 3ம் தலைமுறை ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 6410 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 7435 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விற்பனையா 7435 என்ற எண்ணிக்கையைக் கடந்தாண்டு அதாவது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 247சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஸ்கூட்டரை பொருத்தவரை மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. ஆனால் ஏத்தரிடம் உள்ள சப்ளை செயின் பிரச்சனையால் இதன் விற்பனை தயாரிப்புக்குச் சரியாகவே இருக்கிறது.

ஏத்தர் நிறுவனம் கேரளாவில் தான் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அம்மாநிலத்தில் ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 34 சதவீத பங்கை ஏத்தர் நிறுவனமே வைத்திருக்கிறது.ஏத்தர் நிறுவனம் சமீபத்தில் தனது 50,000வது ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை சமீபத்தில் தனது ஆலையிலிருந்து தயாரித்து வெளியிட்டது. இந்நிறுவனம் மொத்தமே ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் ஆகிய 2 ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்கிறது. எதில் 450எக்ஸ் ஸ்கூட்டரின் தான் சமீபத்தில் 3ம் தலைமுறை அப்டேட்டை பெற்றது.

ஏத்தர் நிறுவனம் எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் என்ற பெயரில் இந்தியாவில் ஆங்காங்கே மக்கள் நேரடியாக வந்து ஸ்கூட்டரை ஓட்டி ஸ்கூட்டரை புக் செய்யும் மையங்களை நிறுவியுள்ளது. சமீபத்தில் ராஞ்சி, கொல்கத்தா, மும்பை, ராஜ்கோட் ஆகிய இடங்களில் தனது எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறந்துள்ளது. இத்துடன் ஏத்தர் நிறுவனம் தற்போது வரை இந்தியாவில் 45 நகரங்களில் 55 எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை நடத்தி வருகிறது.

இது மட்டுமல்லாமல் ஏத்தர் நிறுவனம் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது தலைநகர் டில்லி என்சிஆர் பகுதியில் இந்த திட்டத்தை முயற்சி திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து இந்த திட்டத்தை விரைவில் வேறு நகரங்களுக்கும் விரிவாக்கத் திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனம் தலைமை வணிக அதிகாரி ரவ்நீட் எஸ் போகேலா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இந்தியா முழுவதும் அந்நிறுவனம் தனது சப்ளை செயினை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அடுத்தடுத்த மாதங்களில் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்றும், விரைவில் ஏத்தர் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற நிலையை அடையும் என்றும் கூறினார்.

ஏத்தர் 450 ப்ளஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 5.4 கிலோ வாட் பவர் கொண்டது. இது அதிகபட்சமாக 22 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.9 நொடியில் எட்டி பிடித்துவிடும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 85 கி.மீ வரை மைலேஜ் தரும் என அந்நிறுவனம் ட்ரூரேஞ்ச் மைலேஜை வெளியிட்டுள்ளது.

அடுத்தாக 450எக்ஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 6.2 கிலோ வாட் பவர் கொண்டது. இது அதிகபட்சமாக 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், இந்த ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.3 நொடியில் எட்டி பிடித்துவிடும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 105 கி.மீ வரை செல்லும் என ட்ரூரேஞ்ச் தகவலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏத்தர் நிறுவனத்தை பொருத்தவரை கொரோனா பரவலுக்கு பிறகு தொடர்ந்து விற்பனையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகமாக விற்பனை செய்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சிப் தட்டுப்பாட்டில் சிக்கியதால் தயாரிப்பு முடங்கிப்போனது. இந்நிலையில் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி ஓலா நிறுவனத்தையே விரைவில் தூக்கி சாப்பிடுவிடும்போல தெரிகிறது.


Click it and Unblock the Notifications








