கணவன்-மனைவி உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... ஒரு முறை சார்ஜ் பண்ணா 200 கிமீ பயணிக்கலாம்! செமத்தையா இருக்கு!
பெங்களூருவைச் சேர்ந்த ஜோடிகள் இந்தியாவிற்கான சிறப்பு வசதிகள் வாய்ந்த எலெக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். இந்த மின்சார பைக்கின் சிறப்பு வசதிகள் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த பிரத்யேக தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒபென் இவி (OBEN EV). இது ஓர் ஆரம்ப நிலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அதன் முதல் மின்சாரத்தால் இயங்கும் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இதனை பெங்களூருவைச் சேர்ந்த தினகர் மற்றும் மதுமிதா அகர்வால் எனும் ஜோடியே வடிவமைத்து உருவாக்கி இருக்கின்றனர்.

இந்நிறுவனம் ஏற்கனவே இந்த பைக்கின் 16 மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் நாட்டின் குறிப்பிட்ட சாலைகளில் வைத்து தற்போது பல பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மின்சார பைக் வெளிச் சந்தைகளில் இருந்து பெறப்பட்ட பாகங்கள் உடன் உருவாகி வருகின்றது.

தினகர் மற்றும் மதுமிதா அகர்வால் ஜோடி இயக்கி வரும் இந்நிறுவனம், முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பாக தனது நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனம், மின் வாகன உற்பத்தி பணியில் 2020ம் ஆண்டிலேயே ஈடுபட தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் பெயரிடப்படாத புதிய மின்சார பைக் வெறும் 3 செகண்டுகளிலேயே மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க உச்சபட்சமாக மணிக்கு 100 கிமீ எனும் வேகத்திலும் செல்லும் திறனுடன் இந்த இ-பைக் உருவாக்கப்பட்டு வருகின்றது.

புதிய இ-பைக் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அதேநேரத்தில், குறைவான விலை, புதுமை, அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த மின்சார பைக் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜாகும் திறனும் இந்த பைக்கிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

மேலும், இதைவிட வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பமும் இந்த வாகனத்தில் வழங்கப்படும் என ஓபென் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய உதவும். பைக் சட்டம் (ஃப்ரேம்) ஒட்டுமொத்த வாகனத்தின் எடையையும் ஓர் மையப் புள்ளிக்கு கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன், செல்போன் செயலி மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி போன்ற அதிநவீன வசதிகளும் இந்த பைக்கில் இடம் பெற இருக்கின்றது. ஓபென் இவி நிறுவனத்தின் இந்த மின்சார பைக் நடப்பாண்டின் (2022) முதல் காலாண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நம்பிக்கையிலேயே தயாரிப்பு நிறுவனம் இருக்கின்றது.

மிக விரைவில் இ-பைக்கிற்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. ஆகையால், இதன் டெலிவரி பணிகள் 2022 ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்திய மின்சார வாகன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

அந்தவகையில், இந்த இருசக்கர வாகனத்திற்கும் சூப்பரான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ஏஆர்எக்ஸ் எனும் பெயரில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








