பாரத் பெட்ரோலியத்துடன் கைகோர்த்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி! இனி எலெக்ட்ரிக் வண்டிகளுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இல்ல!
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) நிறுவனமும் தற்போது கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி, இந்தியா முழுவதும் 3,000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை (Battery Swapping Stations) அமைக்கவுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில், பவுன்ஸ் நிறுவனம் இந்த பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைக்கிறது.

இந்தியாவின் டாப்-10 நகரங்களில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் இந்த பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு பவுன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அருகில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் எங்கே உள்ளது? என்பதை பவுன்ஸ் செயலியின் (Bounce App) மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களில், சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய எலெக்ட்ரிக் வாகனத்தின் தீர்ந்து விட்ட பேட்டரியை கொடுத்து விட்டு, ஏற்கனவே சார்ஜ் நிரப்பி வைக்கப்பட்டுள்ள பேட்டரியை பெற்று கொள்ளலாம். இதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதும்தான் இதன் நோக்கம். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும் என்பதும் இதில் ஒன்று. ஆம், உண்மைதான். பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால், ஒரு சில நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி கொள்ள முடியும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், அவற்றை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் ஆகும். சாதாரண சார்ஜரில் சார்ஜ் செய்தால், பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 5 மணி நேரம், 6 மணி நேரம் என நீண்ட நேரம் ஆகலாம்.

எனவேதான் பொதுமக்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் இந்த பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இங்கு ஏற்கனவே பேட்டரிகள் சார்ஜ் செய்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை தங்களது எலெக்ட்ரிக் வாகனத்தில் மாற்றி கொண்டு, வாடிக்கையாளர்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம். இடையூறு இல்லாத பயணத்தை இது உறுதி செய்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் தயங்குவதற்கு மற்றொரு காரணம் அவற்றின் விலை. ஆம், வழக்கமான ஐசி இன்ஜின் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம்தான். இந்த பிரச்னைக்கும் கூட பேட்டரி ஸ்வாப்பிங் நல்ல தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை 40-50 சதவீதம் வரை குறைவதற்கு, பேட்டரி ஸ்வாப்பிங் உதவி செய்யும் என கூறப்படுகிறது. ஐசி இன்ஜின் வாகனங்களாக இருந்து, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பேட்டரி ஸ்வாப்பிங் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டிலேயே பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 போலவே, இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்தும் கூட ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் களமிறங்குகின்றன.


Click it and Unblock the Notifications








