சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
புதுமுக எலெட்க்ரிக் பைக் ஒன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் எவ்ட்ரிக் மோட்டார்ஸ் (EVTRIC Motors). இந்நிறுவனமே இந்திய சந்தையில் புதுமுக எலெக்ட்ரிக் பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ரைஸ் (EVTRIC RISE) எனும் இ-பைக்கையே அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இதுவே எவ்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் மின்சாரத்தால் இயங்கும் பைக்காகும். அறிமுகமாக மின்சார பைக்கிற்கு ரூ. 1,59,990 விலையை அது நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தைத் தொடர்ந்து இ-பைக்கிற்கான முன் பதிவுகளை ஏற்கும் பணியில் எவ்ட்ரிக் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

ரூ. 5 ஆயிரம் முன்தொகையில் அப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் பொருட்டு இந்த இ-பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே குறைவான விலை மற்றும் குறைவான முன் தொகையை ரைஸ் இ-பைக்கிற்கு எவ்ட்ரிக் மோட்டார்ஸ் நிர்ணயித்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி பைக்கின் ஸ்டைலும் தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையிலேயே உள்ளது. அதாவது, மிகவும் குறுகலான பாதையில்கூட பயணிக்கும் வகையில் சற்று ஒல்லியான தோற்றம் இ-பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சபட்ச வேகமும் சற்று குறைவுதான்.

எவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் பைக்கில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த திறனை வழங்குவதற்காகக் 2000 வாட் பிஎல்டிசி மோட்டாரை எவ்ட்ரிக் மோட்டார்ஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டாருக்கான மின் சக்தியை வழங்கும் பொருட்டு 70v/40ah லித்தியம் அயன்-பேட்டரி பேக் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் எலெக்ட்ரிக் பைக்கில் 110 கிமீ துரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இ-பைக்கிற்கு கவர்ச்சி சேர்க்கும் பொருட்டு எல்இடி லைட்டுகளால் வாகனம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

ஹெட்லைட், பகல்நேர மின் விளக்கு உள்ளிட்டவை எல்இடி தர மின் விளக்குகளாலயே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சிவப்பு மற்றும் கருப்பு என இரு விதமான வண்ண தேர்வுகளில் இ-பைக்கை விற்பனைக்கு வழங்க எவ்ட்ரிக் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த வாகனத்தின் வருகை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே பெட்ரோல் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருவோரை மையப்படுத்தியும் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன் வருகைகுறித்து எவ்ட்ரிக் மோட்டார்ஸ்-இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் பாட்டில் கூறியதாவது, "உள் எரிப்பு இயந்திரம் (ஐசிஇ) வாகன பயன்பாட்டில் இருந்து மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தயங்கும் வாடிக்கையாளர்களைக் கூட எங்களின் தயாரிப்பு வெகுவாக கவர்ந்திழுக்கும்" என்றார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகையும் சரி, விற்பனையும் சரி அனல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. ஆம், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி எவ்ட்ரிக் போன்ற புதுமுக நிறுவனங்களும் அதிகளவில் மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுவதால் சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், எதிர்காலத்தில் புதுமுக மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காகவும் அகுர்டியில் புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தனது புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தி எவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்திய மின்வாகன சந்தையில் தன்னுடைய கால் தடத்தை பதித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








