எலெக்ட்ரிக் டூ-வீலரை உருவாக்கும் பணியில் அம்பாசடர் கார் உற்பத்தியாளர்.. விரைவில் ஹீரோ எலெக்ட்ரிக்கிற்கு ஆப்பு!
புகழ்பெற்ற அம்பாசடர் காரை தயாரித்து வந்த ஹிந்துஸ்தான் மோட்டார் வெகு விரைவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

என்னதான் இந்தியாவில் பன்முக கார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், நம் நாட்டை தாயகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் மொத்தம் மூன்றுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (Hindustan Motors). இந்த நிறுவனம் செயல்பட தொடங்கிய ஆண்டு 1942 ஆகும்.

80ஸ் வரை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான வரவேற்பு நாட்டில் கிடைத்து வந்தது. இந்த நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பானது இந்திய வாகன உலகின் வரலாற்றிலேயே மிக முக்கியமான இடத்தை பிடிக்க வைத்துவிட்டது. அந்தளவிற்கு மிக அமோகமான வரவேற்பை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நாட்டில் பெற்றது.

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு இந்நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் நிறுவனம் அதன் உற்பத்தி பணிகளையே நிறுத்துமளவிற்கு பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது. மேலும், அதன் புகழ்பெற்ற பிராண்டான அம்பாசிடரை பிஎஸ்ஏ குழுமத்திற்கு விற்குமளவிற்கும் அது தள்ளப்பட்டது.

2017 ஆம் ஆண்டிலேயே அம்பாசிடர் பிராண்ட் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டது. இந்தியாவின் முதல் வாகன உற்பத்தியாளருக்கு ஏற்பட்ட இந்த விபரீதம் ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பேரிடியாக அமைந்தது. இந்த நிலையிலேயே சமீபத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார் ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனத்துடன் கூட்டணியின் வாயிலாக தனது மறு வருகையை பதிவு செய்ய இருப்பதாக அறிவித்தது.

இந்த தகவல்கள் வெளியாகி ஒரு சில வாரங்களே ஆகின்றன. இந்த நிலையில் தற்போது நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் கார் மற்றும் டூ-வீலர் ஆகிய இரண்டையும் அது தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஆகையால், இன்னும் ஒரு சில மாதங்களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின்கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மின் வாகன உற்பத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் தொழில்நுட்பம்குறித்து ஆராய்தால் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவதற்கான வேலைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீடுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புதிய நிறுவனத்தை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, புதிய ஆலையில் தயாரிக்கப்படும் புதுமுக வாகனங்கள் அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டூ-வீலர் புராஜெக்டை கையில் எடுக்க இருக்கின்றது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி பணிகள் மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்பரா உற்பத்தி ஆலையில் வைத்தே மேற்கொள்ளப்பட இருக்கின்றது. கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் என அனைத்தும் இங்கு வைத்தே உருவாக்கப்பட இருக்கின்றன.

நிறுவனம் தற்போது 300 பேரை வாகன உற்பத்தி பணியில் ஈடுபடுத்தியிருக்கின்றது. விரைவில், 400 பேரை அது பணியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. வர்த்தக பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே இந்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க இருப்பதாக ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இந்த தகவலால் நிறுவனம் வெகுவிரைவில் ஒகினவா, ஹீரோ மோட்டோகார்ப், ஏத்தர் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புதுமுக மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








