களத்தில் இறங்கிய ஜப்பான் இன்ஜினியர்கள்... எலெக்ட்ரிக் அவதாரத்தில் வருகிறது ஆக்டிவா... டிவிஎஸ், பஜாஜிற்கு செக்!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ஹோண்டா (Honda) நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. தற்போது பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்றன.
ஆனால் ஹோண்டா நிறுவனம் இன்னமும் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனினும் காலம் மாறி வருகிறது என்பதை உணர்ந்துள்ள ஹோண்டா, தற்போது தனது முதல் எலெக்ட்ரிக் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முழு வீச்சில் தயாராகி கொண்டுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் பாதியில் ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image used for representation purpose only
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இது இருக்கும். பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, ஆக்டிவா (Activa) ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இது இருக்கலாம் என ஹோண்டா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா நிறுவனம் ஜப்பானை சேர்ந்தது. அங்குள்ள இன்ஜினியர்களையும், இந்தியாவில் பணியாற்றும் இன்ஜினியர்களையும் இணைத்து புதிய குழு ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்காக இந்த இன்ஜினியர்கள் குழு வேலை செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு ஜப்பான் இன்ஜினியர்கள் குழு உதவி செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால் வெற்றி கிடைக்குமா? என்ற விவாதங்களை எல்லாம் ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே நடத்தி முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதங்களின் இறுதியில்தான் இந்திய வாடிக்கையாளர்களின் நடைமுறை பயன்பாடுகளுக்கு ஏற்ற மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முடிவை ஹோண்டா நிறுவனம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில், டூவீலர்கள்தான் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகும் தயாரிப்புகளாக உள்ளன. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தற்போது தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதுவும் ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா, தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக திகழ்கிறது. ஸ்கூட்டர்கள் என்ற அளவில் மட்டுமல்லாது, ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) போன்ற மிகவும் பிரபலமான பைக்குகளுக்கு எல்லாம் சவால் அளிக்கும் வகையில், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் டூவீலர்களில் முதன்மையானதாகவும் ஹோண்டா ஆக்டிவா திகழ்ந்து கொண்டுள்ளது. எனவே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமல்லாது, ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) ஆகிய மற்ற பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும், ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹோண்டா நிறுவனம் மட்டுமல்லாது, யமஹா (Yamaha) நிறுவனமும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








