ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரீகால் செய்வதாக அறிவித்த ஒகினவா... காரணம் என்னனு தெரியுமா?
ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தனது ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரீகால் செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வரும் நிலையில், ஒகினவா ஆட்டோடெக் (Okinawa Autotech) நிறுவனம் ரீகால் (Recall) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 3,215 ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேட்டரி தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதனை சரி செய்வதற்காக இந்த ரீகால் அறிவிப்பை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹெல்த் செக்-அப் முகாமின் ஒரு பகுதி என இதனை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நிறைய இடங்களில் தொடர்ச்சியாக தீப்பிடித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் எழுந்துள்ள நிலையில், ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்த ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்படும் ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் செக் செய்யப்படும். லூஸ் கனெக்டர்கள் (Loose Connectors) அல்லது ஏதாவது சேதம் இருந்தால், இந்தியா முழுவதும் உள்ள ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து டீலர்ஷிப்களிலும், இலவசமாகவே சரி செய்து தரப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல், பிரச்னை இருந்தால் சரி செய்து தருவதற்காக, தனது டீலர் பார்ட்னர்களுடன், ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தற்போது தொடர்பில் உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருவது என்ற கொள்கையின் அடிப்படையில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்த ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே தீ விபத்து நினைவிற்கு வரும் அளவிற்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று கொண்டுள்ளன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை குறையும் சூழல் உருவாகியுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சமே இதற்கு காரணம்.

இந்த சூழலில்தான், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. உங்களிடம் அந்நிறுவனத்தின் ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருந்தால், அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது சிறந்ததாக இருக்கும்.

ஒகினவா நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஓகி90 (Okhi90) என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற மிக பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகள், சிறப்பான ரேஞ்ச், சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய சந்தையில் ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தீ விபத்து சம்பவங்கள் காரணமாக விற்பனை பாதிக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் தற்போது முன்னணி நிறுவனங்களுடன் பல்வேறு சிறிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் களமிறங்கியுள்ளன.

எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும் செய்திகள் வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டன. அதேபோல் தீ விபத்து சம்பவங்களும் தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளன. ஆனால் இந்த பிரச்னைகளுக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தீ விபத்து சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications








