எதிரிகளை தடம் தெரியாமல் அழிக்கப் போகும் ஓலா! நவம்பர் மாதம் மரண மாஸ் சம்பவத்தை பண்ணீட்டாங்க!
ஓலா நிறுவனம் தொடர்ந்து 3வது மாதமாகக் கடந்த நவம்பர் மாதமும் மொத்தம் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ரூ1 லட்சத்திற்கு அதிகமான விலையில் உள்ள பிரிமியம் செக்மெண்ட் ஸ்கூட்டர்களில் அதிகமாக ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனமே செய்துள்ளது. இது குறித்த விரிவான தெளிவான தகவல்களைக் காணலாம்.
ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. இந்த ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றது. இதன் லுக்கே இந்த ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் ஸ்கூட்டர் விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில் மாதம் 10 ஆயிரம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிவந்த நிலையில் ஓலா நிறுவனம் கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து 20 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இதை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். ரூ1 லட்சத்திற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் எல்லாம் பிரிமியம் செக்மெண்ட் ஸ்கூட்டர்களாக கருதப்படும். அப்படிப் பார்த்தால் பிரிமியம் செக்மெண்டில் பெட்ரோல் இன்ஜின் எலெக்ட்ரிக் இன்ஜின் மொத்தம் சேர்ந்து விற்பனையான ஸ்கூட்டர்களில் ஓலா நிறுவனம் மட்டும் 50 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. கடந்த மாதம் ஏத்தர் நிறுவனம் 7234 ஸ்கூட்டர்களையும், டிவிஎஸ் நிறுவனம் மொத்தம் 10 ஆயிரம் ஐக்யூப் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளனர்.
இந்த விற்பனை சாதனை குறித்துக் குறிப்பிடும் போது ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால், "ஐசிஇ இன்ஜின்களுக்கான காலம் முடிந்துவிட்டது. பிரிமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் நம்பத் துவங்கிவிட்டனர். ஓலா நிறுவனம் இனி மற்ற செக்மெண்டிலும் வளர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்யும். 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருசக்கர வாகன துறையே எலெக்ட்ரிக் வாகனமாகத் தான் இருக்கும்" எனக் கூறினார்.
பிரிமியம் ஸ்கூட்டர்களுக்கான மெக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது 92 சதவீத பங்கை வகித்துள்ளது. இது 2021ம் ஆண்டு இது வெறும் 36 சதவீதமாகத் தான் இருந்தது. ஓலா தவிர இந்த செக்மெண்டில் ஏத்தர், ஓகினவா, ஓகாயா, டிவிஎஸ், ஆம்பியர் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியிடுகின்றன. இருந்தாலும் விற்பனையில் ஓலாவின் கையே ஓங்கியிருக்கிறது.ஓலா நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சிக்கு அந்நிறுவனம் அபாரமாகத் தனது விற்பனையை விஸ்தரித்து வருவதே முக்கியமான காரணமாகும். இந்நிறுவனம் இதுவரை இந்தியாவில் 50 எக்ஸ்பிரியன்ஸ் மையங்களை நிறுவியுள்ளது.
விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 200 எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஓலா நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடவுள்ளது. அடுத்தாக ஓலா காரும் தயாராகி வருகிறது. ஓலா நிறுவனம் இந்த தயாரிப்புகளை எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது ஆலையில் தான் உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் விற்பனையை 20 ஆயிரம் ஸ்கூட்டர்களுக்கு மேலாகச் செய்தபோது அது பண்டிகை காலம் மக்கள் அதிகம் வாகனம் வாங்கும் காலம் அதனால் விற்பனை அதிகமாகியுள்ளது எனப் பேசப்பட்டது. ஆனால் நவம்பர் மாதமும் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து தனது விற்பனையில் நிலைத் தன்மையை ஓலா நிறுவனம் அடைந்துள்ளது. தற்போது ஓலாவின் குறைந்த விலை ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவில்லை.
ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஏர் ஸ்கூட்டரை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தி அதற்கான புக்கிங்களை பெற்றிருந்தாலும், இன்னும் அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவில்லை. அடுத்த மாதம் அதாவது 2023 ஜனவரியில் இதற்கான விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வந்துவிட்டால் ஓலாவின் விற்பனை எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஓலா நிறுவனத்தின் இந்த வளர்ச்சி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாதம் 50 ஆயிரம் ஸ்கூட்டரை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications








