நம்ம கொடி பறக்க வேண்டிய எடத்துல வேற யார் கொடி பறக்கும்! வெளிநாட்டில் வெயிட்டான சம்பவத்தை செய்த ராயல் என்பீல்டு
இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவை கடந்த உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.
இந்த சூழலில், பிரேசில் (Brazil) நாட்டில் புதிய அசெம்பிள் (Assemble) ஆலை ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஆலையில் தனது பைக்குகளை அசெம்பிள் செய்யும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த புதிய ஆலை அமைந்துள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு 15 ஆயிரம் பைக்குகளை அசெம்பிள் செய்ய முடியும்.

இது இந்தியாவிற்கு வெளியே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நான்காவது அசெம்பிள் யூனிட் ஆகும். இதற்கு முன்னதாக தாய்லாந்து (Thailand), கொலம்பியா (Colombia) மற்றும் அர்ஜென்டினா (Argentina) உள்ளிட்ட நாடுகளில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் அசெம்பிள் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் பிரேசில் சந்தையில் தனது அனைத்து பைக்குகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதன்படி கிளாசிக் 350 (Classic 350), மீட்டியோர் 350 (Meteor 350), இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) மற்றும் ஹிமாலயன் (Himalayan) உள்பட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து பைக்குகளும், பிரேசில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும். எனவே இந்தியாவிற்கு வெளியே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக பிரேசில் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பிரேசில் மட்டுமல்லாது, இன்னும் உலகின் பல்வேறு நாடுகளின் சந்தைகளிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது, இந்திய சந்தைக்கு மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டங்களை வகுக்காமல் போய் விடுமா என்ன? இந்திய சந்தையில் தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு புதிய பைக்குகளை அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) என்ற பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. ஆனால் இந்த பைக்கின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாத தொடக்கத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புத்தம் புதிய சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலைகளை அறிவித்து, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு இந்திய சந்தையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகிய பைக்குகளை அந்நிறுவனம் நடப்பாண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் வரும் 2023ம் ஆண்டை, சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அறிமுகத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து 2023 ராயல் என்பீல்டு புல்லட் 350 (2023 Royal Enfield Bullet 350) உள்ளிட்ட பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் மீட்டியோர் 650 மட்டுமல்லாது, இந்தியாவின் 650 சிசி பைக் செக்மெண்ட்டில் இன்னும் பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








