30000 புக்கிங்கை குவித்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி எப்போது? நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிம்பிள் எனெர்ஜி (Simple Energy) நிறுவனத்தின் சிம்பிள் ஒன் (Simple One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது டெலிவரி கொடுக்கப்படும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம், பெங்களூரை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி (Simple Energy). இந்நிறுவனம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட சிம்பிள் ஒன் (Simple One) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் அறிமுகப்படுத்தியது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. அறிமுகம் செய்யப்பட்டது முதலில் இருந்து தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் குவித்திருக்கின்றது.

இதனை புக் செய்துவிட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையிலான ஓர் தகவலையே சிம்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

நிறுவனம் வரும் 2022 ஜூன் மாதத்தையே இதற்காக தேர்வு செய்திருக்கின்றது. இந்த மாதத்தில் இருந்தே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையான சார்ஜில் 203 முதல் 236 கிமீ தூரம் ரேஞ்ஜ் தரும். இது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உச்சபட்சமாக 180 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓலா நிறுவனம் எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) எனும் இரு விதமான தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றிற்கு போட்டியாகவே அதிக ரேஞ்ஜ் திறன் வசதியுடன் சிம்பிள் ஒன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது வெறும் 2.95 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் பேட்டரிகளை கழட்டி மாட்டிக் கொள்ளலாம். ஆகையால், தேவைக்கேற்ப பேட்டரியை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி, டச் ஸ்கிரீன், நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்களும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ளது. இது ஃபேஸ்1 உற்பத்தி ஆலையாகும்.

இரண்டாவது ஆலை தர்மபுரி பகுதியில் அமைய இருக்கின்றது. இது சுமார் 600 ஏக்கர் பரப்பளவில்ஆண்டிற்கு 12.5 மில்லியன் மின் வாகன உற்பத்தி திறனில் உருவாக இருக்கின்றது. இவ்விரு ஆலைகளில் தயாரிக்கப்படும் மின் வாகனங்களே நாடு முழுவதிற்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக பெரிய ஸ்டோரேஜ் வசதி உடன் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 30 லிட்டர் கொள்ளளவு வசதியைக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








