ஹைட்ரஜனில் இயங்கும் 2-வீலர்ஸ்... இந்தியாவிற்காக தயாரிக்கும் அமெரிக்க இவி நிறுவனம்!!
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டிரைட்டன் இவி இந்தியாவில் விரைவில் அதன் ஹைட்ரஜன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவிற்கு போட்டியாக அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்கள் வடிவமைப்பில் ஈடுப்பட்டுவரும் நிறுவனம்தான் டிரைட்டன் இவி ஆகும். இந்திய சந்தையில் நுழைய தீவிரமாக இருக்கும் இந்த இவி நிறுவனத்தின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய 2-சக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டிரைட்டான் இவி தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஹைட்ரஜன் வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளனவாம். மற்றப்படி இதன் அறிமுக தேதி குறித்த எந்தவொரு தகவலும் தற்போதைக்கு இல்லை.

இதுகுறித்து டிரைட்டன் எலக்ட்ரிக் வாகனம் நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை இயக்குனருமான ஹிமாங்சு பட்டேல் கடந்த ஜூலை 22ஆம் தேதி அளித்த பேட்டியில், "மிக விரைவில் நாங்கள் எங்களது முதல் 2-சக்கர வாகனத்தை இந்திய சாலைகளில் கொண்டுவர உள்ளோம். புதிய தலைமுறை மொபைலிட்டியை வழங்க வேண்டும் என்கிற எங்களது நோக்கத்தில், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் முதலாவதாக டிரைட்டன் இவி-இல் இருந்து வருகின்றன" என்றார்.

இதன் மூலமாக இந்தியாவிற்கான 2-சக்கர வாகனங்களின் வடிவமைப்பு பணிகளில் டிரைட்டன் இவி ஈடுப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 3-சக்கர வாகனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், குஜராத் மாநிலத்தில் புஜ் என்கிற பகுதியில் தனது முதல் இந்திய தொழிற்சாலையை நிறுவவுள்ளதாக இந்த அமெரிக்க இவி தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

சுமார் 600 ஏக்கர்கள் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில்தான் விரைவில் டிரைட்டன் இவி-இன் மேற்கூறப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். ஆனால் உண்மையில், இந்த தொழிற்சாலையை தனது எலக்ட்ரிக் லாரிகளை தயாரிக்கவே டிரைட்டன் இவி உருவாக்கி வருகிறது.

மேலும், உலகிலேயே மிக பெரிய எலக்ட்ரிக் லாரி உற்பத்தி தொழிற்சாலையாகவும் இதனை உருவாக்கும் எண்ணத்தில் டிரைட்டன் உள்ளது. இதற்காக அடுத்த 5 வருடங்களில் குறைந்தப்பட்சமாக சுமார் ரூ.10,800 கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா. இந்த தொழிற்சாலை உடன் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் தனது ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தையும் டிரைட்டன் இவி நிறுவனம் நிறுவி வருகிறது.

இதன் மூலமாக உலகளவில் டிரைட்டன் இவி நிறுவனத்தின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களின் செயல்பாடுகள் விரிவடைய உள்ளன. மற்ற ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களில் இந்த அமெரிக்க நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள், லாரிகள் மற்றும் சிறப்பு பயன்பாட்டு வாகனங்களை பல்வேறு குழுவினருடன் வடிவமைத்து வருகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டில் தெலுங்கானாவில் தனது தொழிற்சாலையை நிறுவ உள்ளதாக டிரைட்டன் இவி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் எந்த அளவிற்கு உள்ளன என்பது தெரியவில்லை. இத்தனைக்கும், கடந்த ஆண்டில் தனது 8-இருக்கை எச் எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும் ஐதாராபாத்தில் டிரைட்டன் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

மேலும், அப்போதுதான் இந்திய சந்தையில் தான் நுழைய உள்ளதாக இந்த இவி நிறுவனம் தனது திட்டங்களை தெரிவித்திருந்தது. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த தெலுங்கானா தொழிற்சாலையையும் விரைவில் கட்டி முடித்து எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக டிரைட்டன் இவி பயன்படுத்தலாம். ஏனெனில் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனம் உள்ளது.


Click it and Unblock the Notifications








