ஜனவரி 23ம் தேதி புதிய டூ-வீலரை அறிமுகம் செய்யும் ஹோண்டா! என்னனு தெரியாம விழிபிதுங்கி நிற்கும் போட்டியாளர்கள்!
ஹோண்டா சீக்கிரமே புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யப் போகுதாம். நிறுவனமும் இதுகுறித்த தகவலை டீசர் படத்தின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹோண்டா நிறுவனம் வரும் ஜனவரி 23ம் தேதி ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த டீசர் படத்தில் "புதிய ஸ்மார்டான ஒன்றை தேர்ந்தெடுக்க தயாராக இருங்கள்" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இருக்குமோ!
மேலும், நிறுவனத்தின் இந்த சஸ்பென்ஷனான தகவல் ஒருவேளை ஹோண்டா புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றதோ என்கிற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஹோண்டா நிறுவனம் உலகளவில் 2025 ஆம் ஆண்டிற்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகின்றது. இதற்கான பணிகளை நடப்பு 2023 ஆம் ஆண்டிலேயே ஹோண்டா தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையிலே நிறுவனத்தின் டீசர் படம் அமைந்து உள்ளது. தற்போது உலகளவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலும் நிறுவனம் களமிறக்க இருப்பது மின்சார இருசக்கர வாகனமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இது மின்சார இருசக்கர வாகனமாக இருப்பின் சந்தைக்கு ஏற்ப ஸ்வாப்பபிள் பேட்டரி பேக், தீயை தவிர்க்கும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இருக்குமோ!
இதுமட்டுமின்றி, முழு சார்ஜில் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஓர் ஃபுல் 150 முதல் 200 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் திறனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா அதன் டாப் செல்லிங் இருசக்கர வாகன மாடலான ஆக்டிவா ஸ்கூட்டரிலேயே மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவும் ஓர் காரணமே
சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் அதன் கிளை அங்கமான 'ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பேட்டரி ஸ்வாப் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதுபோன்று நிறுவனம் சார்ந்து வெளியாகி இருக்கும் சில தகவல்களே மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்கிற யூகிப்பை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகல
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. அது வரும் 23 ஆம் தேதி ஓர் புதிய மாடலை வெளியீடு செய்ய இருப்பதாக மட்டுமே தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த சஸ்பென்ஸ் போட்டி நிறுவனங்களை விழிபிதுங்க செய்துள்ளது. என்ன வாகனத்தை அது கொண்டு வர இருக்கின்றதோ என ஆழ்ந்த சிந்தனைக்குள்ள தள்ளி இருக்கின்றது. அவர்களை மட்டுமில்லைங்க, ஹோண்டா இருசக்கர வாகன பிரியர்களையும் இந்த டீசர் படம் மிகுந்த ஆவலுடன் காத்திருக்க செய்திருக்கின்றது.
விற்பனை சரிவு
ஹோண்டா நிறுவனம் அவ்வப்போது விற்பனைச் சரிவை இந்திய சந்தையில் சந்தித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற ஆண்டின் டிசம்பர் மாத விற்பனை புள்ளி விபரம் அமைந்துள்ளது. "என்னங்க இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஹோண்டா சந்திச்சிருக்கு" என கூறும் அளவிற்கு மிகவும் மோசமான விற்பனை வீழ்ச்சியை நிறுவனம் சந்தித்திருக்கின்றது. நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகன விற்பனை 2022 நவம்பரைக் காட்டிலும் 2022 டிசம்பரில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கின்றது.
வருடாந்திர விற்பனையில் சாதனை
2022 நவம்பரில் ஒட்டுமொத்தமாக 3,73,221 யூனிட்டுகள் விற்பனையாகிய நிலையில், 2022 டிசம்பரில் அது 2,50,171 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. இது 1.23 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் குறைவான விற்பனை ஆகும். இது மாபெரும் விற்பனை வீழ்ச்சி ஆகும். அதேவேளையில், நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை வளர்ச்சியை பாதையில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2021 டிசம்பரைக் காட்டிலும் 2022 டிசம்பரில் அதிக புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
2021 டிசம்பரில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் 2,23,621 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில் இது கடந்த 2022 ஆம் ஆண்டின் டிசம்பரில் 2,50,171 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இதில், உள்நாட்டில் விற்பனைச் செய்யப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை 2,33,151 ஆகும். பாக்கி உள்ள 17,020 யூனிட்டுகளே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இந்த மாதிரியான விற்பனை வளர்ச்சியை அடுத்தடுத்து வருடங்களிலும் பெற வேண்டும் என்பதில் ஹோண்டா மிகுந்த கவனத்துடன் இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








