என்னங்க சொல்றீங்க... பெட்ரோல் இல்லாமலும் இயங்கும் யமஹா எஃப்.இசட் பைக்கா!! இனி மைலேஜை பற்றி கவலையே இருக்காது!
பெட்ரோல் & டீசலை முழுவதுமாக சார்ந்திருக்காமல் மற்ற எரிபொருள்களை நோக்கி செல்ல வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சியில் சமீப காலமாக அதிகளவில் சிஎன்ஜி வாகனங்கள் அறிமுகமாகி வருவதை பார்த்திருப்பீர்கள். சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல் என்ஜினில் இயங்கக்கூடியவைதான், ஆனால் என்ஜின் முற்றிலுமாக பெட்ரோலை சார்ந்தில்லாமல், இயற்கை எரிவாயுவின் உதவியுடனும் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
சிஎன்ஜி போன்று பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் மற்றொரு எரிபொருள் தேர்வு தான் ஃப்ளக்ஸ்-ஃப்யுல் ஆகும். இதுவும் பெட்ரோலை சார்ந்திருப்பதுதான் என்றாலும், முழுவதுமாக அல்ல. அதாவது குறிப்பிட்ட அளவு பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனாலை கலந்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களே ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் ஆகும். ஏனெனில் எத்தனாலின் விலை நம் இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோலை காட்டிலும் சற்று குறைவாக உள்ளது. மேலும், பெட்ரோலுக்காக வேறொரு நாட்டையோ (அ) வெளிநாட்டு நிறுவனத்தையோ சார்ந்திருக்க வேண்டாம் என்பதே இந்த விஷயத்தில் இந்திய அரசின் நோக்கமாகும்.

பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் வேலைகளை வாடிக்கையாளர்கள் செய்ய தேவையிருக்காது. ஏனெனில் தற்போதைய சூழலில் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோலில் குறிப்பிட்ட சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த சதவீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில், ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் மேலும் அதிகமாக களமிறக்கப்பட வேண்டும். இந்த வகையில் நடைபெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் ஃப்ளக்ஸ்-ஃப்யுல் என்ஜின் தேர்வில் களமிறக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் வெளியீடு செய்யப்பட்டிருப்பதுதான் யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ 15 பைக் ஆகும். இந்தியாவிலும் இந்த யமஹா பைக் விற்பனையில் உள்ளது என்றாலும், ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ளக்ஸ்-ஃப்யுல் தேர்வில் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருப்பது பிரேசில் நாட்டை சேர்ந்த எஃப்.இசட்-எஃப்.ஐ மோட்டார்சைக்கிள் ஆகும். அதுவே தென் அமெரிக்க சந்தையில் இதே பைக் ஃபாஸர் எஃப்.இசட்-15 என அழைக்கப்படுகிறது. இதனால் தான் பைக்கின் பெட்ரோல் டேங்கில் ஃபாஸர் பெயரை பார்க்க முடிகிறது.

பிரேசிலில் விற்பனை செய்யப்படும் எஃப்.இசட்-15 பைக்காக இருப்பினும், கிட்டத்தட்ட இதே மாடல் தான் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே பிரேசிலில் விற்பனையில் இருக்கும் எஃப்.இசட்-15 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக் நேரடியாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த எஃப்.இசட்-15 மோட்டார்சைக்கிள் 80% பெட்ரோல் + 20% எத்தனாலில் இருந்து 100% வரையில் முற்றிலுமாக எத்தனாலில் கூட இயங்கக்கூடியது.
இந்த எஃப்.இசட்-15 பைக்கிலும் வழக்கமான 149சிசி SOHC, 2-வால்வு, 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் வழக்கமான பெட்ரோலை உபயோகத்தில் இயங்கும்போது அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.4 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டைமண்ட் ஃப்ரேம் சேசிஸில் வடிவமைக்கப்படும் புதிய யமஹா எஃப்.இசட்-15 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகிறது.

இந்த புதிய எஃப்.இசட்-15 பைக்கில் பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 282மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகிறது. இயக்க ஆற்றலை பொறுத்தவரையில், எத்தனாலை கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கப்பெறும் என்ஜின் ஆற்றல் சற்று குறையலாம்.
இருப்பினும் இவ்வாறான ஃப்ளக்ஸ்-ஃப்யுல் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் தேவை ஆகும். ஏன் என்பதற்கான காரணத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். மேலும், வாகன புகையின் மூலம் காற்று மாசடைவதையும் இவ்வாறான ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் பெரிய அளவில் குறைக்கும். இத்தகைய முயற்சியில் பிரீமியம் தர பைக்குகளை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யும் யமஹா இறங்கியிருப்பது உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








