காரை சமதளத்தில் நிறுத்தலைனா இவ்வளவு பிரச்னைகள் வருமா?
காரை சமதளத்தில் பார்க்கிங் செய்வது அவசியம். அவ்வாறு செய்யவில்லையென்றால் காரில் இந்த பிரச்னைகளையும், பாதிப்புகளும் ஏற்படும்.
காரை கையாளும்போது, நாம் கவனிக்காமல் செய்யும் சிறு விஷயங்களால் பெரிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறான ஒரு சிறு விஷயத்தை கார் ஓட்டுனர்கள் கவனிக்காமல் செய்யும் தவறால் ஏற்படும் பெரிய விளைவுகள் குறித்த இந்த செய்தியில் காணலாம்.

காரை நிறுத்தும்போது சமதளத்தில் நிறுத்துவது உத்தமம். அது எந்த கியரில் நிறுத்துவது நல்லது என்பது குறித்த ஒரு விரிவான பதிவு ஒன்றை நேற்று முன்தினம் பார்த்தோம். இந்த நிலையில், காரை சமதளத்தில் நிறுத்தாவிடில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

சில வேளைகளில் காரை சற்றே பக்கவாட்டில் சாய்த்து நிறுத்தி வைத்துவிடுவோம். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு எடுக்கும்போது கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படும்.

பேட்டரி டவுன் ஆகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, மாற்று பேட்டரி மூலமாக ஸ்டார்ட் செய்ய முயற்சித்தாலும் காரியம் சித்தி அடையாது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

காரை ஒரு புறம் சற்றே சாய்வாக நிறுத்தி வைக்கும்போது எரிபொருள் கலனில் இருந்து எஞ்சினுக்கு எரிபொருள் உறிஞ்சும் அமைப்புக்கு எரிபொருள் கிடைக்காது. மேலும், குறைவாக எரிபொருள் இருக்கும்போது இந்த பிரச்னை அதிகம் ஏற்படும்.

எனவே, என்னதான் முயற்சித்தாலும் இதற்கு கார் ஸ்டார்ட் ஆகாது. இதுபோன்ற சமயங்களில் இக்னிஷனை தொடர்ந்து ஆன் செய்து செல்ஃப் ஸ்டார்ட் ஸ்டார்ட் மோட்டாரை இயக்கியபடியே, ஆக்சிலரேட்டரை முழுவதுமாக கொடுக்கவும்.

30 வினாடிகள் வரை தொடர்ந்து செய்யும்போது கார் ஸ்டார்ட் ஆகிவிடும். இருப்பினும், காரை நிறுத்தும்போது முடிந்தவரை சமதளத்தில் நிறுத்துவது அவசியம். இதனால், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். ஆனால், இதுதான் பிரச்னை என்பதை உணர்ந்து கொண்டு இதனை செய்யவும். இல்லையெனில், செல்ஃப் மோட்டார் பழுதடைய வாய்ப்புண்டு.

பக்கவாட்டில் சாய்வாக நிறுத்தும்போது இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால், இதுமட்டுமல்ல, சரிவான சாலைகளில் நிறுத்துவதால் கார் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

சரிவான சாலைகளில் நிறுத்தும்போது ஹேண்ட் பிரேக் கேபிள் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்பிற்கு அதிக சுமை ஏற்படும். இதனால், அவை சீக்கிரமாகவே அதன் முழு திறனை இழக்கும். கதவுகள் திறந்து மூடும் அமைப்பிலும் கூட பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், சஸ்பென்ஷனில் ஸ்பிரிங் அமைப்பிலும், டயர்களிலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து சரிவான பகுதியில் நிறுத்திவைக்கும்போது சேஸியீல் கூட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

எனவே, காரை சமதளத்தில் நிறுத்துவதன் மூலமாக இந்த பிரச்னைகளை தவிர்க்க முடியும். மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்போர், அவ்வப்போது காரை எடுத்து ஓட்டி நிறுத்துவதன் மூலமாக இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தவிர்க்க வழியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








