காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்!
காப்புரிமை பிரச்னை காரணமாக, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 என்ற கடுமைான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. புதிதாக விற்பனைக்கு செல்லும் கார், பைக் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களிலும், குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் எஞ்சின்களை பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

இந்த விதிகளுக்கு தக்கவாறு பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை உருவாக்குவதில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளது.

மேலும், பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருகிறது. இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 எஞ்சினில் இடம்பெறும் ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் என்ற சாதனம் காப்புரிமையை மீறி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த ஃப்ளாஷ் எலெக்ட்ரானிக்ஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினில் இந்த சாதனம் மிக முக்கிய உதிரிபாகமாக இருக்கிறது. எஞ்சின் உற்பத்தி செய்யும் மாறுதிசை மின்னோட்டத்தை குறிப்பிட்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையில், நேர் மின்னோட்டமாக மாற்றி பேட்டரிக்கு அனுப்பும் முக்கிய பணியை இந்த சாதனம் செய்யும்.

இந்த சாதனத்தின் செயல்படும் முறைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஃப்ளாஷ் எலெக்ட்ரானிக்ஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எனவே, இதுகுறித்து அமெரிக்காவின் விஸ்கன்சின் நீதிமன்றத்தில் ராயல் என்ஃபீல்டு மீது காப்புரிமை விதிமீறல் குறித்து அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 எஞ்சினுக்குரிய இந்த ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனத்தை அவுரங்காபாத்தை சேர்ந்த வரோக் என்ற நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறுகிறது. காப்புரிமை பிரச்னையையடுத்து, இரு நிறுவனங்களுக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

எனவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில், காப்புரிமை பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால், புதிய சப்ளையரிடமிருந்து ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனத்தை பெறும் நிலைக்கு ராயல் என்ஃபீல்டு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறும்போது, இந்த சாதனத்தின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், தனது பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களின் விலை கணிசமாக உயர்த்தும் நிலைக்கு ராயல் என்ஃபீல்டு தள்ளப்படலாம்.

அதேபோன்று, குறுகிய காலத்தில் புதிய ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனம் பொருத்திய, பிஎஸ்-6 எஞ்சினை உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். இதனால், பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








