ஏடிவி., வாகனங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
'ஆல் டெர்ரெய்ன் வெகிக்கிள்' எனப்படும் விசேஷ அம்சங்கள் கொண்ட ஏடிவி., வாகனங்கள் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றவை. எந்தவொரு மோசமான சாலை மற்றும் வானிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவை. இவை சாகச விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
போலரிஸ் வாகனங்கள்
அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் மட்டும் தற்போது ஏடிவி ரக வாகனங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் இந்திய மார்க்கெட்டில் ஏடிவி., வாகனங்களை இறக்க திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி வரி
பெரும்பான்மையான ஏடிவி வாகனங்கள் இறக்குமதி செய்து விற்கப்படுகின்றன. இறக்குமதி செய்து விற்கப்படும் இந்த வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. சில ஆரம்ப ரக வாகனத்தின் விலையே ரூ.8 லட்சத்தை தாண்டுகிறது.
மாசு அதிகம்
பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் இந்த ஏடிவி வாகனங்கள் அதிக கார்பன் புகையை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவேதான், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
விலை குறையும்
இந்தியாவிலேயே ஏடிவி., வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ளன. இந்தியாவிலேயே தயாரிக்கும்போது ஏடிவி வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.
மார்க்கெட் விரிவடையும்
தற்போது மேல்தட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த ரக வாகனங்கள் விற்கப்படுகின்றன. மேலும், கரடு முரடான மற்றும் மலைப்பாங்கான சாலைகள் அமைந்த எல்லையோர கண்காணிப்பு பணிகளில் தற்போது ஒட்டகம் மற்றும் ஏடிவி ரக ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக இந்த வாகனங்களை களமிறக்க வாய்ப்பு ஏற்படும்.
குஜராத் போலீஸ்
போலரிஸ் ஏடிவி வாகனங்களுக்கு குஜராத் போலீசார் ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புத் துறை பயன்பாடுகளில் இந்த ரக வாகனங்களை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என போலரிஸ் தெரிவிக்கிறது. மேலும், விலை குறைந்தால் நடுத்தர வர்க்கத்தினரையும் கவர்ந்திழுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications