ஈக்கோஸ்போர்ட்டை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கனவு கானல் நீராகி வருகிறது. இந்த மாதம், அடுத்த மாதம் என்று காத்திருந்தவர்களுக்கு இன்னும் 4 மாதங்கள் வரை கூடுதலாக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை வேறு ஃபோர்டு கார்களை வாங்கிக் கொள்ளுமாறும், இல்லாவிடில் முன்பதிவை ரத்து செய்துவிடுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை எண்ணிக்கையில் குறைவு
60,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ஈக்கோஸ்போர்ட் பெற்றது. ஆனால், மாதத்திற்கு மாதம் ஈக்கோஸ்போர்ட்டின் டெலிவிரி கொடுக்கப்படும் கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம், ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது புலனாகிறது.
பிரச்னை என்ன?
ஈக்கோஸ்போர்ட்டுக்கான உதிரிபாக சப்ளையில் பிரச்னை இருந்து வருகிறது. பல முக்கிய பாகங்கள் வெளிநாடுகளில் இறக்குமதி செய்து சென்னையிலுள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாகங்களின் சப்ளை சரிவர இல்லை என்பதே பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது.
கையறு நிலையில் டீலர்கள்
ஃபோர்டு நிர்வாகத்திடமிருந்து எந்தவொரு உத்தராவாதமும் இல்லாமல் இருதலை கொள்ளி எறும்பாக ஃபோர்டு டீலர்கள் தவித்து வருகின்றனர். ஈக்கோஸ்போர்ட்டுக்கு பதில் வேறு காரை தேர்வு செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் முன்பதிவை ரத்து செய்து விடுங்கள் என்று வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
டேமேஜ் ஆகும் இமேஜ்
ஈக்கோஸ்போர்ட் மூலம் வெகுவாக ஏறிய ஃபோர்டு பிராண்டு இமேஜ் தற்போது அதே ஈக்கோஸ்போர்ட் மூலம் டேமேஜ் ஆகி வருகிறது.
காத்திருப்பு காலம்
ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு 6 மாதங்களாக டெலிவிரி கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்னும் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தகவல் போனதால் நொந்து நூடுல்சாகியிருக்கிறார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ஃபோர்டு
காத்திருப்பு காலம் கூட பரவாயில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தற்போது ஈக்கோஸ்போர்ட் விலையை ரூ.70,000 உயர்த்தியதுடன், அது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு இடியாக இறங்கியுள்ளது.
பொறுமைக்கு எல்லையுண்டு
இத்தனைக்கும் பல மாதங்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவும் தயாராக இருக்கின்றனர். ஏனெனில், ஈக்கோஸ்போர்ட் மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. ஆனால், ஃபோர்டு எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கு பெருத்த சங்கடத்தை தருகிறது. இப்போது சொல்லப்படும் 4 மாதங்கள் இன்னும் 6 மாதங்கள் அல்லது 8 மாதங்களாக நீடித்தால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணம்.
ஜாக்பாட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் கிடைக்காத வாடிக்கையாளர்கள் பலர் தற்போது தங்களது கவனத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ஹோண்டா அமேஸ் கார் பக்கம் திருப்பியுள்ளனர் என மார்க்கெட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதனால்தான், இந்த இரு கார்களின் விற்பனையும் தொடர்ந்து சிறப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
பல புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி, ஹோண்டா என பல நிறுவனங்கள் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த புதிய எஸ்யூவி மாடல்கள் வந்தால் நிச்சயம் ஈக்கோஸ்போர்ட் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தற்போது ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியில் ஃபோர்டு சொதப்பி வருவது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, முதலீடு செய்து காத்திருக்கும் டீலர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications