கடந்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் காம்பேக்ட் எம்பிவி காரின் கான்செப்ட் மாடல் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்த இந்த எம்பிவி காரை சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டிருக்கிறது. அதில், இந்தியாவும் கண்டிப்பாக இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த கான்செப்ட் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
கான்செப்ட் மாடல்
ஜெனிவா மோட்டார் ஷோவில் மிட்சுபிஷி AR என்ற பெயரில் எம்பிவி கான்செப்ட் வைக்கப்பட்டிருந்தது. அதன் மாதிரி படத்தைதான் காண்கிறீர்கள். இந்த கான்செப்ட்டின் அடிப்படையில்தான் புதிய எம்பிவி தயாரிப்பு நிலைக்கு உருப்பெறவுள்ளது.
எஞ்சின்
மிட்சுபிஷியின் புதிய காம்பெக்ட் எம்பிவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. டீசல் மாடல் பற்றியும் தகவல் இல்லை.
முதல் மார்க்கெட்
முதலில் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
அறிமுகம் எப்போது?
மிட்சுபிஷி கான்செப்ட் ஏஆர் மாடல் தயாரிப்பு நிலைக்கு செல்வதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும். எனவே, 2017ல் இந்த எம்பிவியை இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மிட்சுபிஷி கால அளவு நிர்ணயித்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு புதிய கார்கள்
ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் செயல்பட்டு வருகிறது. பஜெரோ எஸ்யூவியை மட்டும் இந்தியாவில் விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புதிய செடான் கார் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த புதிய எம்பிவி கார் மாடலும் இந்தியா வரும் என கருதப்படுகிறது.