பயந்த மாதிரியே நடக்கத் தொடங்கிருச்சு... இனி பெட்ரோல், டீசல் கார்களை வாங்குறது இன்னும் கஷ்டம்!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக இக்னிஸ் இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த காரின் விலையே தற்போது அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விலை உயர்விற்கு அரசு விரைவில் அமல்படுத்த இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ் 6 கட்டம் இரண்டே காரணம் ஆகும்.
இது நிகழ்நேர மாசு வெளிப்பாட்டை கட்டாயப்படுத்துகின்றது. அதாவது, பயன்பாட்டில் ஓர் வாகனம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவு மாசை வெளிப்படுத்துகின்றது என்பதை லைவாக காண்பிக்கும் கருவி இருக்க வேண்டும் என்பதையே புதிய விதி கட்டாயப்படுத்துகின்றது. இந்த அம்சத்தைப் பெறுகின்ற காரணத்தினாலேயே மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

அரசு புதிய மாசு உமிழ்வு திட்டம் பற்றிய தகவலை அறிவித்தபோது அனைவரும் வாகனத்தின் விலை உயர்த்தப்பட்டுவிடுமோ என அஞ்சத் தொடங்கினர். இந்த அச்சமே தற்போது நிகழ தொடங்கியிருக்கின்றது. அதாவது, வாகனத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கணித்ததைப் போலவே புதிய வாகனங்களின் விலையை உயரத் தொடங்கி இருக்கின்றது.
இதற்காக சான்றாகவே மாருதி சுஸுகி இக்னிஸின் விலை உயர்ந்து இருக்கின்றது. இதேபோல் அடுத்தடுத்தாக இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் பிரபலமான கார் மாடல்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 27 ஆயிரம் வரை இக்னிஸின் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்விற்கு புதிய மாசு உமிழ்வு விதி மட்டுமே காரணம் இல்லை.

மாருதி சுஸுகி இந்த காரில் சில புதிய அம்சங்களையும் சேர்த்து இருக்கின்றது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் (electronic stability program) மற்றும் ஹில்-ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்களையே புதியதாக சேர்த்து உள்ளது, மாருதி சுஸுகி. இந்த புதிய அம்சங்கள் சேர்ப்பினால் இக்னிஸின் பாதுகாப்பு திறன் முன்பைவிட தற்போது சற்று லேசாக அதிகரித்து இருக்கின்றது.
மாருதி சுஸுகியின் தயாரிப்புகளில் பாதுகாப்பு சற்று கேள்விக் குறியாகவே இருக்கின்றது. இந்த பெயரில் இருந்து தங்களின் நிறுவனத்தை விடுவிக்கும் விதமான முயற்சியில் மாருதி சுஸுகி கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சமீபத்தில் நிறுவனத்தின் புகழ்பெற்ற செடான் ரக கார் மாடலான சியாஸில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சில சேர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்தே தற்போது இக்னிஸும் பாதுகாப்பான வாகனமாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கார் தற்போது டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் சி3 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.
இதில், சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக ஸ்மார்ட் ப்ளே மற்றும் தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், சாவி இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, புஷ்-ஸ்டார்ட் வசதி, ஸ்டியரிங் வீலை டில்ட் செய்யும் வசதி மற்றும் பவர் ஃபோல்டபிள் ஓஆர்விஎம் போன்றவையும் இக்னிஸிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

1.2 லிட்டர், 4 சிலிண்டர், கே சீரிஸ் பெட்ரோல் மோட்டாரே இக்னிஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரை ஒட்டுமொத்தமாக ஆறு விதமான சிங்கிள் டோன் நிற தேர்விலும், 3 விதமான டூயல் டோன் நிற தேர்விலும் வாங்கிக் கொள்ள முடியும்.
ஒற்றை நிற தேர்வில் துர்குவோய்ஸ் ப்ளூ (Turquoise Blue), லூசென்ட் ஆரஞ்சு (Lucent Orange), நெக்ஸா ப்ளூ (NEXA Blue), க்ளிஸ்டெனிங் கிரே (Glistening Grey), சில்கி சில்வர் (Silky Silver) மற்றும் பியர் ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White) ஆகியவையே கிடைக்கின்றன.

நெக்ஸா ப்ளூ உடன் கூடிய கருப்பு நிற ரூஃப் (NEXA Blue Ignis - Black Roof), நெக்ஸா ப்ளூ உடன் கூடிய சில்வர் நிற ரூஃப் (NEXA Blue Ignis - Silver Roof) மற்றும் லூசென்ட் ஆரஞ்சு உடன் கூடிய கருப்பு நிற ரூஃப் (Lucent Orange with a Black Roof) ஆகியவையே டூயன் டோன் தேர்வில் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









