செடன் கார்களுக்கு சொந்த டீசல் என்ஜின்-மாருதி சுசுகி திட்டம்

தற்போது ஸ்விப்ட், டிசைர், ரிட்ஸ் ஆகிய கார்களுக்குரிய டீசல் என்ஜின்களை பியட்டிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது மாருதி என்பது நினைவிருக்கலாம்.
தனது சொந்த டீசல் என்ஜின்களை அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தவுள்ளதாம் மாருதி சுசுகி நிறுவனம். இதுதொடர்பான பணிகள் விரைந்து நடந்து வருவதாகவும், தங்களது பொறியாளர்கள் டீசல் என்ஜின்களை உருவாக்கும் பணியில் முனைப்புடன் இருப்பதாகவும் மாருதி நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது தயாரிக்கப்படவுள்ள டீசல் என்ஜின்கள் எஸ்எக்ஸ்4 ரக கார்களுக்கு பொருத்தப்படும்.
இதற்கிடையே அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனத்தின் விற்பனை அளவு 1 லட்சமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை அளவை தொடரவும் மாருதிதிட்டமிட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 555 கார்களை விற்றுள்ளது மாருதி சுசுகி. செப்டம்பர் மாத விற்பனை அளவு 95,148 ஆகும்.
இதற்கிடையே மனேசரில் உருவாக்கி வரும் தங்களது 2வது தயாரிப்புத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவுள்ளது மாருதி நிறுவனம். அதேபோல 3வது தயாரிப்பு ஆலை 2013ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்குமாம்.
இந்த விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 3500 கோடியை இறக்கியுள்ளது மாருதி சுசுகி. தற்போது கர்கானில் உள்ள மாருதி நிறுவனத்தின் ஆலையில் வருடத்திற்கு 3.5 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. புதிய ஆலைகள் மூலம் வருடத்திற்கு இனி 12 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும்.


Click it and Unblock the Notifications