வாகனங்கள்-வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்

இந்திய ரிசர்வ் வங்கி தனது முதல் காலாண்டு கடன் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனிற்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் குறுகிய கால முதலீட்டுக்கான வட்டி விகிதத்தையும் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதையடுத்து இந்த விகிதம் 4.50 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இந்த ஆண்டில் இந்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர இந்த வட்டி விகித மாற்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது ரிசர்வ் வங்கி.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடனிற்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








