தென் ஆப்ரிக்காவில் 200 புதிய எஸ்யூவி புக்கிங்: மஹிந்திரா

குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புத்தம் புது எஸ்யூவியை மஹிந்திரா கடந்த மாதம் 29ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. எக்ஸ்யூவி 500 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டு 7 நாட்களில் 8,000 எக்ஸ்யூவி500 புக்கிங் ஆனது. இதையடுத்து, உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு புதிய எக்ஸ்யூவி புக்கிங்கை மஹிந்திரா நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே சர்வதேச பயணத்தை தொடங்கியது எக்ஸ்யூவி500. தென் ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எக்ஸ்யூவிக்கான புக்கிங்கை மஹிந்திரா நிறுவனம் துவங்கியது. உள்நாட்டில் எப்படி எதிர்பாராத வகையில் புக்கிங் டாப் கியரில் சென்றதோ அதே வரவேற்பு தென் ஆப்ரிக்காவிலும் கிடைத்துள்ளது.
பல முன்னணி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தென் ஆப்ரிக்க எஸ்யூவி சந்தையில் சத்தமில்லாமல் இதுவரை 200 எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால், தென் ஆப்ரிக்க மார்க்கெட்டிலும் மார்தட்டி களமிறங்கியுள்ளது புதிய எக்ஸ்யூவி500.


Click it and Unblock the Notifications








