கார்களுக்கு சொந்த பைனான்ஸ் துவங்காதது ஏன்?-ஒன்இந்தியாவுக்கு மாருதி அதிகாரி பேட்டி

பெங்களூரில் மாருதி ஸ்விப்ட் கார் அறிமுகம் செய்யும் விழா லலித் அசோக் ஓட்டலில் நடந்தது. விழாவில் மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் பிரிவு நிர்வாக அதிகாரி பங்கஜ் நரூல்லா, கார்ப்பரேட் இயக்குனர் கன்வல்ஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கார் அறிமுகம் செய்யப்பட்ட பின் கன்வல்ஜித்சிங், ஒன்இந்தியா ஆட்டோமொபைல் சிறப்பு நிருபர் சேத்தன் கிருஷ்ணாவுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது, பல முன்னணி நிறுவனங்கள் கார் கடன் வழங்குவதற்கு சொந்த பைனான்ஸ் துவங்கியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்கள் கூட சொந்த பைனான்சை நடத்தி வருகின்றன. ஆனால், நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான மாருதி ஏன் சொந்த பைனான்சை துவங்கவில்லை. விற்பனை குறைந்ததற்கு சொந்த பைனான்ஸ் இல்லாததும் ஒரு காரணமா? என கேள்விகள் அடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கன்வல்ஜித் சிங் கூறியதாவது:
"கார் தயாரிப்பில் நாங்கள் சிறந்து விளங்குகிறோம். அதேவேளை, பைனான்ஸ் நிறுவனத்தை தனிப்பிரிவாக மட்டுமே துவங்க முடியும் என்பதால், அதில் போதுமான கவனம் செலுத்துவது கடினம். எங்களது கவனம் எல்லாம் தரமான கார்களை மக்களுக்கு தயாரித்து வழங்கவேண்டும் என்பதே.
மேலும், மார்க்கெட்டில் கார் கடன் வழங்கும் சேவைகளை ஏராளமான வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன. கார் விற்பனையை அதிகரிக்க சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடன் வழங்குவது ஒரு குறைந்த கால திட்டமாக மட்டுமே இருக்கும். எங்களது திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் வகுக்கப்படுகின்றன.
எனவே, எதிர்காலத்திலும் சொந்த பைனான்ஸ் துவங்கும் திட்டம் இல்லை. கார் விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வழங்குகிறோம். கார் விற்பனைக்கு தக்கவாறு உற்பத்தியை கூட்டி குறைத்துக்கொள்கிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








