வோக்ஸ்வேகனுக்கு ஏ-ஸ்டார் காரை சப்ளை செய்ய மாருதி சுஸுகி முடிவு

மாருதி சுஸுகியின் ஏ-ஸ்டார் காருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.மாருதியின் ஹேட்ச்பேக் வரிசையில் ஏ-ஸ்டார் மாடல் சிறந்த காராக பாராட்டுக்களை பெற்று வருகிறது.இந்த நிலையில், ஏ-ஸ்டார் காரை புதிய பிராண்டில் விற்பனை செய்ய விரும்புவதாக வோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பரிசீலித்த மாருதி சுஸுகி நிறுவனம்,வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஏ-ஸ்டார் கார்களை சப்ளை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காக,ஏ-ஸ்டார் காரின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளில் ஏ-ஸ்டார் கார் புதிய வடிவமைப்புடனும்,புதிய பிராண்டு பெயரிலும் வெளிவரும் என ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஏ-ஸ்டார் கார்களை சப்ளை செய்வதற்காக மாருதி சுஸுகி,வோக்ஸ்வேகன் இடையே விரைவில் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.
ஏ-ஸ்டார் கார்களை ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான நிசான் நிறுவனத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக வழங்கி வருகிறது.இதனால்,ஏ-ஸ்டார் கார்களை புதிய பிராண்டில் விற்பனை செய்ய வோக்ஸ்வேகனும் விரும்புவதாக கூறப்படுகிறது.
மாருதி சுஸுகி கூட்டு குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வோக்ஸ்வேகன் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








